காகிதச் சுருணை

பெருவணிக அங்காடிகளின்
நெடுவரிசை காத்திருப்பில்
நின்று கொண்டிருந்த பொழுதாவது
என் நினைவில்
இடறிவிட்டிருக்கலாம் ......
வியர்த்த பிசுக்குகள்
உலர்ந்துகொண்டிருக்கும் பொழுதே
வந்துவிட்டிருந்த எனது முறைக்குச்
சற்றுமுன்னராவது என்னுள்
வந்துவிட்டிருக்கலாம்.....
பெரியதாய் உள்ளிழுத்த
சதவிகிதக் கழிவுகள்.... சுழியமாய்
அச்சேறியிருந்த சிட்டைகளோடு
சில்லறைக்குப் பகரமாய்
திணிக்கப்பட்டிருந்த
சுவாசப் புத்துணர்வி வில்லையாவது
எனக்குள் கிளறிவிட்டிருக்கலாம்.....
அரைக்கிலோ வெல்லத்திற்கு
சில்லறை இல்லை... அரநூறாப் போட்றவா...?
வேண்டாமெனில்...சரி.
அப்பறம் வாருங்க... வெனச் சொல்லி..
சரியான மீதங்களோடு..
கூடவே கொறிக்கக் கொஞ்சம்
கடலையும் கொடுக்கும் அண்ணாச்சிகள்...
இன்னும்கூட பிடிவாதமாகவே
ஞாபகங்களில் வருவதற்கு
மறுத்துக் கொண்டிருந்தார்கள்........!