ருசிகளின் பசியோ இது

இலை வைதாகிவிட்டதாம்
மெதுவாகவே நகர்கிறோம்
இது
பசியும் நாகரிகம் பார்க்கும்
கல்யாண விருந்து...

பர்ப்யூம்களோடு
கலந்து பிரியாணியும்
பவுடரோடு கலந்து பீடாவும்
இன்னும் என்ன என்ன வாசங்களோ
பிரித்து சொல்வதற்கில்லை

நாகரிகமாய் பரிமாறப்பட்டு
நாசுக்காய் சுவைத்து
குவியலாய் மூடிக்கொள்ளும்
நெய் நனைத்த மைசூர்பாவும்
முந்திரி பக்கோடாவும்
விரல் தீண்டா கன்னி பெண்களை போல

இலையின் மிச்சங்கள்
நாகரிகத்தின் உச்சங்களோ என்னமோ??

ஆ அது என்ன?
இங்கும் ஏழ்மை உண்டா?
"பாப்பா எதாவது இருந்தா கொடுக்க சொல்லு"
வாசல் தாண்டவும்
வழி மறித்து கை ஏந்துகிறாள்
கூன் விழுந்த கிழவி...

"நீ இன்னும் போகலையா, எவ்ளோ நேரமா சொல்லிட்டு இருக்கேன்"
வெள்ளை சட்டை விரட்ட
"சாப்டு ரெண்டு நாளாச்சு"
சொல்லியபடியே நகர்கிறாள்

வெட்கம் கெட்ட
கண்ணீரை தவிரவும்
இதுவரை
நானும் ஒன்றும் செய்ததில்லை
வெள்ளை சட்டைக்காரரை போல...

மகாலட்சுமி...

எழுதியவர் : மகாலட்சுமி (20-Apr-15, 3:08 pm)
பார்வை : 51

மேலே