இருக்கட்டும் தள்ளு – மீள்பதிவு

................................................................................................................................................................................................
தொகுப்புரை

பட்டணத்தில் வேலை பார்க்கும் மருமகளைப் பற்றி கிராமத்து சின்ன மாமியாரும், பெண்ணின் சித்தியும்.

மாமியார் குறை கூற, சளைக்காமல் சித்தி “ கோல்” அடிக்கிறார். ஒரு கட்டத்தில் சித்திக்கு கோபம் வருகிறது - அந்த கோபத்தை அந்தம்மா மேல் காட்ட முடியாது; ஆகையால் தேமே என்று எங்கோ இருக்கும் ஒருவரைத் திட்டி தன் கோபத்தைத் தணித்து கொள்கிறார்.

சிக்னல் சின்ன மாமியாருக்குப் புரிந்து கப்சிப்...!
................................................................................................................................................................................................

சின்ன மாமியார் :

‘‘அம்மாம் பெரிய வீடான்னு அசந்து போனேன்டி
அம்புட்டும் நமக்கில்லே’ன்னு அப்புறம் சொன்னான்டி;

அஞ்சாவது மாடியேறி அலுத்துப் போனேன்டி,
கொஞ்சூண்டு வாசல் வச்ச குட்டி வீடுடி!’’

பெண்ணின் சித்தி :

‘‘ரெண்டு பேரு வாழ எதுக்கு நாயக்கர் ஹாலு?
சென்னைமா நகருன் னாலே பேரு பெத்த பேரு! ’’

சின்ன மாமியார் :

‘‘மீசையத்த சின்னப் பையன் மேலதி காரியாம்;
ஆஸ்தி பாஸ்தி அனுபவஸ்தர் ஆபிஸ் பையனாம்;

ஆன் டூட்டி, ஆஃப் டூட்டி அசத்திப் போடுறா;
அஷ்டமி நவமி நாள் கிழமை நகத்தைக் கடிக்குறா;

பொறந்த நாளு கொண்டாட்டம் வாழ்த்து சொல்லுறா;
எரியறத அணைக்கிறாளே, என்னா சகுனமோ?

பெண்ணின் சித்தி :

‘‘சகுனம் பார்த்து செஞ்ச தெல்லாம் சாஞ்சி போச்சுதே;
சகட்டுமேனி செய்யறாவ, செய்யட்டும் தள்ளு. ’’

சின்ன மாமியார் :

‘‘பட்டனை தட்டி சமைக்கிறா, துணியும் துவைக்கிறா;
பட்டனை தட்டி ஓடுறாளே, எந்த ஊருக்கு?

‘‘சாக்லெட்டும் பிஸ்கட்டும் சாப்பா டுங்கறா;
சாதம் வெறுத்த பொம்பளை ஏன் சம்பா திக்குறா? ’’

பெண்ணின் சித்தி :

‘‘ கோயில் யானை போலிருந்தா குடும்பம் தாங்குமா?
வாயைக் கட்டி பார்த்துக்கறா, வாழட்டும் தள்ளு! ’’

சின்ன மாமியார் :

‘‘ நேர்ல நின்னு பேசப் போனா நேர மில்லை யாம்;
ஃபோன்ல பேசி மெயிலைப் போட்டா பொட்டுன்னு கேக்குறா;

தாலிக்கயிறு தெரிஞ்சாக்கா தள்ளி விட்டுக்கறா;
கார்டை மட்டும் நாய் மாதிரி கழுத்தில் மாட்டிக்கறா!

புருசன்காரன் பேரைச் சொல்றா; நாம சொல்வமா?- ’’

பெண்ணின் சித்தி : - ‘‘அந்த
எருமை பேரை எவ சொல்லுவா? இருக்கட்டும் தள்ளு. ’’

................................................................................................................................................................................................
அருஞ்சொற் பொருள்.
பட்டனை தட்டி ஓடுறாளே- ட்ரெட் மில்.(treadmill )

................................................................................................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (6-May-15, 3:22 pm)
பார்வை : 225

மேலே