நானற்ற நாழிகை - தேன்மொழியன்
நானற்ற நாழிகை
~~~~~~~~~~~~~~
எந்நிலை கடப்பினும்
ஓர்நிலை சிதைப்பதே
என் நிலை என்றாக ..
சார் நிலை வெறுத்திட
யார் விலை கொடுத்தது ..?
கேள்விகள் உடைந்திட
வேள்விகள் தொடுப்பினும்
வெற்றுடல் வலிமையில்
கற்றதும் மாயமோ ...?
ஊழ்வினை உரைத்திடும்
ஒரு குரல் ஒலித்திட
தசை நார் அறுத்திடும்
சிறு விரல் தூரமோ ..?
எத்திசை நடப்பினும்
என் திசை எரிந்திட
சுழல் விசை நடுவில்
என்னுடல் சிதறுமோ ..?
- தேன்மொழியன்