சுடலை மாடன்

பூலோகத்தில் வாழும்
எல்லா ஜீவராசிகளுக்கும் சேர்த்து
படியளந்து பசிதீர்த்து வருவானடா..
பரமசிவன் ..என்று பாட்டி சொல்வாளடா !

அந்தப் பரமசிவரை
சோதிக்க நினைத்தவளாம் ..
பார்வதி தேவி ஒரு நாளடா....
சிறு குப்பிக்குள்ளே ஒரு சிற்றெரும்பு மறைத்து
இடுப்பில் முடிந்து வைத்து கொண்டாளடா!

ஒரு ஜீவனுக்கு உணவு இன்று
தரவில்லை நீங்கள் என்று சொல்லி சிரித்தாளடா ..!
பதிலுக்கு சிரித்த அந்த பரமசிவரும் ..
மறைத்துவைத்திருக்கும் குப்பி திறந்து பார் என்றாரடா!
அசந்து போனாளாம் அந்த பார்வதி தேவியும்
உள்ளிருக்கும் எறும்பு ரெண்டு அரிசி துண்டுகளை
கொரித்து விழுங்குவதை பார்த்தபின்னே.
அப்புறமும் ஆண் பிள்ளை ஒன்று வேண்டிடவே ..
சந்தேகம் கொண்ட பார்வதிக்கு
தலை இல்லாதொரு பிள்ளை தந்தானடா ..
தேவதச்சனிடம் சொல்லி தலையொன்று செய்தபின்னே
சுடலை மாடன் வந்து பிறந்தானடா..
தினமும் அவன் பூலோகம் சென்று .
சுடுகாட்டு பிணம் தின்று திரும்பியே வருவானடா ..

இது கண்ட பார்வதியும் சுடலையை சொர்க்கம் விட்டு
வெளியேற்றி விட்டாளடா ..
தனக்கு ஒரு உலகம்..தனை வணங்கும் மாந்தர் என
உருவாக்கிக் கொண்டானடா..சுடலை
கெடுக்கும் சாமியில்லை ..
தனக்கு பக்தியுடன் படையல் செய்பவரை என்றும் காப்பானடா ..
இசக்கி தன்னை கடிமணமும் கொண்டானடா ..
இன்னல் துரோகம் இழைக்கின்ற மனிதரை அவன்
பழிக்கு பழி தீர்ப்பானடா.
..
சுடலை மாடன் கதை பொய்யோ ..கதையோ..
எப்படி வேண்டுமானாலும் இருந்திட்டு போகட்டுமே..
இன்று ..
நமக்கு ஒரு சுடலைமாடன்
அவசரத் தேவை இதை நீ அறிந்து கொள்வாயடா..
நீ கொடுத்த பலிகள் போதும் ..
பல கொடுமை இந்நாட்டில்..
அனுதினமும் நடக்கின்ற வேளைதனில் ..
சுடலை மாடன் போல் ஒருவன்
எழுந்து வரவேண்டும்..வேண்டிக் கொள்ளடா
இனக் கொடுமை பிரிவினைகள் ..
லஞ்ச ஊழல் வன்கொடுமை செய்பவரை
அழித்திடவே சுடலை மாடன் போல் ஒருவன்
சடுதியில் வர வேண்டுமே..
இந்த சமயத்தில் வர வேண்டுமே!
அந்த சுடலை மாடன் இன்று
..
அவன் துணைக்கு எங்களிலே..
கருப்பசாமியுண்டு.. போத வில்லை என்று சொன்னால் ,
நீலி, முனி, சங்கிலி பூதம், பேச்சியும் எங்களிலே
நேர்மையும் துணிச்சலுமாய் இருக்கின்றார் ..அவரை
சுடலைக்கு துணையாக அனுப்பியே வைப்போமடா!

தீச்சட்டி கொழுந்து விட்டெரிகின்ற நேரமிது

ஒரு பிடி மண் எடுத்து இங்கு கலயம் தனிலிட்டு
உந்தன் கரத்தில் தருவோமடா..
சீவலப்பேரி சுடலை மாடனை வரச் சொல்லடா!

எழுதியவர் : கருணா (19-May-15, 4:43 pm)
Tanglish : sudalai maatan
பார்வை : 689

மேலே