நீயும் நானும் யாரோ இன்று

நீயும் நானும் யாரோ இன்று
***நினைவில் வாழக் கற்றது நன்று
காயும் நிலவை ரசித்தோம் சேர்ந்து
***கடமை அழைக்கச் சென்றோம் பிரிந்து !

இதயம் ஒன்றாய் இணைந்தோம் அன்று
***இன்னல் தொலைத்தோம் காதலை வென்று
உதய வாழ்வில் ஊமை யானோம்
***உண்மை யன்பை மனதினுள் புதைத்தோம் !

சூழல் உணர்ந்து விலகி னாலும்
***சுயமாய் ஏற்கப் பழகிக் கொண்டோம்
வாழக் கற்றோம் அவரவர் வழியே
***வரமாய்ப் பெற்ற குணத்தால் உயர்ந்தோம் !

சுமையைக் கூட சுகமாய் நினைத்தோம்
***சுவர்க்கம் நரகம் மண்ணில் கண்டோம்
அமைந்த வாழ்க்கை அமைதியாய் ஏற்றோம்
***அழகாய் மழலை இருவரும் பெற்றோம் !

பிரிவும் நம்மை வாட்டிட வில்லை
***பிள்ளைச் செல்வமே இன்பத்தின் எல்லை
புரியா தவர்க்குப் புதிராய்த் தோன்றும்
***புரிந்த மனமோ புனிதம் அறியும் !

பாயில் படுத்தால் நினைவுகள் வாட்டும்
***பக்தியே மருந்தாய்க் கவலையை ஓட்டும்
நோயில் சுருண்டு முடியும் தருணம்
***நோக்க ஒருமுறை அனுமதிப் பாயா ....??

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jun-15, 11:40 pm)
பார்வை : 147

மேலே