இருள்நீங்கிய இதயத்தால் சாத்தியமே
இருள்சூழ்ந்த சாலையோ மிளிர்கிறது
இருபுறமும் விளக்குகள் ஒளிர்கிறது !
பனிபடர்ந்த பாலமிதுவா தெரியவில்லை
பழுதடைந்த பாதையுமா அறியவில்லை !
கருப்புவெள்ளை அழகன்றோ என்றுமே
விருப்புவெறுப்பும் அவரவர் எண்ணமே !
ரசித்திடும் உள்ளங்களும் மாறுபடுமே
ருசித்திடும் சுவைகளும் வேறுபடுமே !
எண்ணங்கள் போரிடும் வேளைகளில்
ஏக்கங்கள் ஏறுமுகமும் காண்கையில்
அடைந்திடும் ஆழ்மனதும் அமைதியே
அந்நேரம் இவ்விடத்தில் வந்திட்டால் !
தீர்வுகளும் பெறலாம் திருத்தங்களின்றி
தீராத இருளில் தனிமையில் இருந்தால் !
தீண்டாமை தீண்டாமலே திரும்பிவிடும்
தீயாய்சுடும் இதயங்களும் தணிந்திடும் !
இதயமும் ஒருமிக்கும் இருட்டானால்
இன்பமே வாழ்வின் பொருட்டானால் !
இருளால் மாறிடுமா வாழ்க்கையுமே
இருள்நீங்கிய இதயத்தால் சாத்தியமே !
பழனி குமார்