சத்தியமாய் சாத்தியமில்லை

எப்படி மறப்பேன்
உன்னை?
எப்படி இழப்பேன்
உன் அருகிருப்பை?

அழிப்பது சாத்தியமா?
என் வாழ்வின் பெரும்பகுதி
நீயாகவே இருந்திருக்கிறாய்...
இனி உன் நினைவுகளாய்
இருந்துவிட்டு போகட்டுமே!
அதை ஏன் திருப்பிக் கேட்கிறாய்?

அன்றொரு நாள்
வானம் வெறித்து நானிருக்க
அப்படி என்ன தானடி இருக்கிறது
அதில் என்றாய்...
மெது மெதுவாய் புன்னகைத்து
நம் கனவுகள் என்றேன்...
இதமாய் எனையே
இழுத்தணைத்துக் கொண்டாய்!

அழைத்ததும் அருகில் வந்தாய்...
சிரமமாய் சிரித்து வைத்தேன்...
உள்ளுக்குள் பயம் தானே என்று
தலையில் தட்டி
விலகி நடந்தாய்...
பறக்க தயாரானது மனது!!

எப்படி மறந்துவிட
முடியும் என்னால்?

கையிடுக்கில் வழிந்துவிடும்
மழை நீராய் வடிந்தே போய்விடேன்?
ஆசையாய் கை நீட்டி
பிடித்துக்கொண்ட உன்னை
நானே கைத்திருப்பி
கவிழ்த்துவிடுதலென்பது
சத்தியமாய்
சாத்தியம் இல்லை!!!!

எழுதியவர் : யுவபாரதி (27-Jun-15, 5:12 pm)
பார்வை : 79

மேலே