வீட்டின் வாசற்படிகள்

ஆடவருக்கும் பொருந்தும்
பெயர் கொண்டவர்களை
தோழிகளென நிரூபிப்பது
பெரிதாயில்லை எனக்கு
அதை வெகுளியாய்
சிரித்தபடி தொடங்குவதே...

உன் முன் காசு கேட்டு
நின்றிருக்கும் நான்
யாரென்பது இருக்கட்டும்
நீ யானையின்மீது
அமர்ந்திருக்கிறாய் என்
ராஜாதி ராஜனே...

நீ வீட்டைவிட்டு
வெளியே சென்றிருக்கிறாய்
என்பதை தவிர வேறொன்றும்
நானறியேன் பராபரமே
உனக்கு ஆயிரத்து எட்டு
வேலைகள் இருக்கும்
அதை என்னிடம் எப்படி
சொல்ல முடியும்...

இருப்பை பத்து ரூபாய்க்கு
உள்ளாகவே முடக்கிவிட்டு
நீண்ட அழைப்புகளுக்கு
நீவரும்வரை காத்திருந்து
உன் கைபேசியை தொடும்போது
மெல்லியதாய் கூசுகிறதே
இது எவ்வகை
தண்டனையை சேரும்...

இதெல்லாம் கூட உனக்கு
தெரியுமாவென கேட்டநொடி
எதைகொண்டு அறைந்தாய்
செருப்பாக இருந்திருக்க
வாய்ப்பில்லை அதில்
இத்தனை அவமானத்தை
உணர்ந்திருக்க மாட்டேனே...

எழுதியவர் : மணிமேகலை (16-Jul-15, 9:21 pm)
பார்வை : 92

மேலே