ஒருநாள் மாணவனாக

ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து ஆறடி உயரத்தில் தொங்கவிட்டு விடலாம். ஒரு டாக்டர் தவறு செய்தால் அவரை பூமியில் இருந்து எட்டடி பள்ளத்தில் புதைத்து விடலாம்.
(வக்கீல்களும் டாக்டர்களும் மன்னிக்கவும்)

ஆனால் ஒரு ஆசிரியர் தவறு செய்தால்? எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர்.

ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி ஒவ்வொரு வகுப்பறையிலும் உருவாக்கப்படுகிறது என்பதற்கு ஏற்ப தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாணவர்களைச் சிறந்தவர்களாகவும், நல்ல மனிதர்களாகவும் உயிரூட்டுபவர்களே ஆசிரியர்கள். அவர்கள் தவறு செய்தால் எட்டின அளவுக்கு எதிர்கால சந்ததிகள் பாதிக்கப்படுவர்.

தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று என் விருப்பத்தை இதில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு மாணவன் விதை என்று வைத்துக்கொண்டால் அது முளைவிட்டு வளரத் தேவைப்படும் தண்ணீரை ஊற்றுபவர்கள் ஆசிரியர்களே. ஒரு நல்ல விதை வளமானதாக மட்டும் இருந்தால் போதாது… அந்த விதை நல்ல மண்ணில் புதைக்கப்பட்டு நல்ல முறையில் பேணப்பட்டு வளர்க்கப்பட வேண்டும்.

விதையைப் போல தான் மாணவன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. விதைக்கு நல்ல மண்ணும், நல்ல சீதோசனமும், நல்ல தண்ணீரும் இருப்பதைப் போல, அவன் சேருகின்ற பள்ளியும், அவனுக்குப் பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் நல்ல கல்வியறிவையும், நல்ல பண்புகளையும், மிகச்சிறந்த ஒழுக்கத்தையும் கொண்டிருப்பதுடன் அதை அப்படியே அந்த மாணவர்களுக்குத் தவறாமல் கற்றுக் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி கற்றுத்தருவது விதைக்கு நல்ல தண்ணீரை ஊற்றுவதற்கு ஒப்பாகும்.

ஆசிரியர்கள் இவ்வாறு கற்றுக்கொடுக்கும்போது மாணவர்களின் ஆற்றலும், திறமையும் வெளிப்படும். அதன் விளைவாக நல்ல செயல்கள் மாணவர்களிடம் இருந்து வெளிப்படும். அந்த செயல்கள் கண்டிப்பாக அரிய பல சாதனைகளைக் கொண்டுவரும்.

மேற்சொன்ன அனைத்து குணநலன்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் எனது ஆசான் (ஆசிரியப் பெருந்தகை) திரு.P.சாத்தாவு அவர்கள் எனக்கு ஆசிரியராகக் கிடைத்தது, நான் மட்டுமல்ல என் சக மாணவர்களும் செய்த புண்ணியமாகத்தான் இருக்க வேண்டும்.

சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவாரம் முன்பாக ஒரு திருமண நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்க நேர்ந்தது.அந்தஒரு நாள் என் வாழ்வின் மறக்க முடியாத நாளாகும்.அந்த நாள் முழுக்க நான் அவருடன் எனது பள்ளி அனுபவத்தை நினைவு கூர்ந்து மகிழ்ந்தேன்.

அன்று அவரது 'ஒருநாள் மாணவனா'க இருந்தது என் நினைவை விட்டு அகலவே இல்லை.

எழுதியவர் : குமாரராஜா கருப்புசாமி (5-Sep-15, 11:36 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : orunaal manavanaga
பார்வை : 703

மேலே