அப்துல் கலாம் ஒரு பொன்னேடு
அப்துல் கலாம் அவர்களே,
உங்களின்
இறப்புச் செய்திக் கேட்டு,
இராமேஸ்வர தீவுக்கு
அபாய
எச்சரிக்கை விடப்பட்டது,
"இராமேஸ்வரம்
கண்ணீரில் மூழ்குமென்று" !
உண்மைதான்....
இன்று
இராமேஸ்வரம்
தண்ணீரில் அல்ல,
கண்ணீரில் அல்லவா
தத்தளிக்கிறது..........!!
பி. எஸ். எல். வி. யிலும்,
ஜி. எஸ். எல். வி. யிலும்,
நீங்கள் அனுப்பிய
செயற்கைகோள்கள்
இன்று - நன்றி கடனாக
உங்களின் இறப்பு செய்தியை
பரிமாறுகிறதோ..?
கிராமத்தில் பிறந்து,
ஏழ்மையில் வளர்ந்து,
தமிழைப் படித்து,
அறிவியலை
தமிழில் படித்து,
விஞ்ஞானியாய்.....
தரணியாள முடியும்
என்பதற்கு - நீங்கள்
ஒரு முன்னுதாரணம்...
மாணவராய்...
விஞ்ஞானியாய்...
ஆசிரியராய்...
கவிஞராய்...
ஜனாதிபதியாய்...
உங்களின் பன்முகம்,
ஆண்டி முதல் அரசன் வரை
மனித குலத்துக்கே ஒரு
முன் மாதிரி...
பல கோடிக்கணக்கான
இளைஞர்களின்
இதயங்களில்
இடம் பிடித்து,
அவர்களின்
இதயங்களை
இலட்சியப்பாதைகளில்
இயங்கவைத்த...
உங்களின்
இதயம்- களைப்புற்று....
இளைப்பாருகிறதோ ?...
கனவு காணச் சொல்லி
இந்திய மாணவர்களின்
தூக்கத்தை தொலைக்க வைத்த...
நீங்கள்
நிரந்தரமாய்....
உறங்கி போனீரே ஏன்?
விஞ்ஞானி, ஜனாதிபதி
என்ற சொற்களுக்கே
பெருமை சேர்த்தவர் நீங்கள்.
ஆக....
உலக வரலாற்றில் - நீங்கள்
ஒரு பொன் ஏடு...
"நம் பிறப்பு
ஒரு சம்பவமாக
இருக்கலாம் - ஆனால்
இறப்பு ஒரு சரித்திரமாக
இருக்கவேண்டும்"
என்று கூறினீர்கள் - ஆனால்
உங்களின் பிறப்பும்,
இறப்பும் மட்டுமல்ல,
உங்களின் வாழ்க்கையே
ஒரு மாபெரும்
சரித்திரமாகிவிட்டது....
அறிவியல்
முதல் முறையாக
இறந்தது...
ஐன்ஸ்டீன் மறைவின் போது !
அறிவியல்
இரண்டாவது முறையாக
இறந்திருக்கிறது...
கலாம் அவர்களே
இதோ - உங்களின் மறைவுக்கு....!!
உங்களின் சாதி - மனித சாதி,
உங்களின் மதமோ - மனிதம்,
உங்களின் மொழி - அன்பு,
உங்களின் மனம் - குழந்தை,
உங்களின் குணமோ -இரக்கம்,
உங்களின் பண்பு - நட்பு,
உங்களின் நடத்தை - நன்னெறி,
உங்களின் வாழ்க்கை ஒரு - திருக்குறள்,
மனித குலத்துக்கு,
நீங்கள் ஒரு - அணையா விளக்கு.
உங்கள் கனவு நனவாக...
உங்கள் ஆன்மா சாந்தி அடைய...
கடமை உணர்ந்து - நாங்கள்
ஆளுக்கொரு மரம் நடுவோம்..!
அறிவியலை நேசிப்போம்..
அறிவியலை வாசிப்போம்...
அறிஞனாய் யோசிப்போம்...!!
உலக அரங்கில் - உன்னத
"வல்லரசு இந்தியா 2020"
வெகுதொலைவில் இல்லை.......!!!
-- ஆ. க. முருகன், சவூதி அரேபியா
30-07-2015