தீதும் நன்றும் - 3

ஒரு பொருளை
வாங்கி விற்கையில்
இருப்பு கூடினால் லாபம்,
குறைந்தால் நஷ்டம்.
இது வியாபாரக்கணக்கு.

பணம் என்றில்லை
பணமதிப்பாக இருந்தாலும்
அது இலவசம் (அல்லது இலவச மதிப்பு?)
அதனை
மக்கள் தந்தால் லஞ்சம்,
அரசு தந்தால் இலவசம்.
இது தான் ஒரு நாட்டின் கணக்கு.

விலை கொண்ட ஒவ்வொரு பொருளிலும்
மலிவை எதிர்பார்க்கும்
சந்தை போட்டியே
தகுதியையும் தராதரத்தையும்
தீர்மானித்ததால் தான்
இங்கே
அன்பு பண்பு மரியாதைக்கெல்லாம்
மவுசு "இறங்கி சென்றது"

அதனால் எல்லோரும் மனதளவில்
இயந்திரமாய் கணக்குப்போட்டு
வியாபாரியாகி விட்டார்கள்,

அரசுக்கும் மனுநீதி சொன்னது ஒரு காலமே,
அரசினை கேள்வி கேட்டு ஊரை எரித்ததும் ஒரு காலமே
பரமசிவனுக்கு பிச்சை சாபமிட்ட பிரம்மனும் ஒரு கடவுளே
ஆண்டவனால் அகலிகை மோட்சம் பெற்றதும் ஒரு காவியமே

காரண காரியம் எல்லாம் அறிந்தும்
கற்றது எல்லாம் காணாது செய்தீர்
பெருமை பேசியே பொழுதை களித்தனர்
பெருமைக்குரியவர் நம்மை விட்டு சென்றனர்

எடுத்து இயம்ப இங்கே ஏதும் நல்லது சொல்ல,
இனி இங்கு யாரும் இல்லை;

எஞ்சி இருப்பது அரசியல் மட்டுமே, அது
நம்மில் நம்மைச்சுற்றி நம்மால் நமக்காக
நாமே தோண்டிக்கொள்ளும் சகதியானபின்

தீதும் நன்றும் பிறர் தர வாரா!.

எழுதியவர் : செல்வமணி (29-Sep-15, 11:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 193

மேலே