சூரிய சந்திரரிடம் சில கேள்விகள்
சூரியனே !
இன்னைக்கு ஏன் லேட்?
ஏழு மணிக்கு எழுந்தது முதல்
ஆறு மணி வரை அயராது
உழைக்கும் உனக்கு
அலுப்பில்லையா ?
கடிவாளங்கட்டிய இந்த வாழ்க்கைப் பயணம்
கடுப்பு அடிக்கலையா ?
வருஷமெல்லாம் ஏழு மணிக்கு
எழுந்திருக்கும் நீ,
சில மாதங்களில் மட்டும்
சீக்கிரமாய் வந்து லேட்டாக போகிறாய்.
அது என்ன?
அப்ரைசல் டைமா?
நிலவே !
நீ மட்டும் ஏன் தினமும்
நைட் ஷிஃப்ட் பார்க்கிறாய்;
சூரிய குடும்பத்திற்கு புதிதாக
வேலைக்குச் சேர்ந்தாயோ ?
நாலு நாள் நைட்ஷிஃப்டுக்கே எங்களுக்கு
நாக்கு தள்ளி விடுகிறது;
நீ எப்படித்தான் சமாளிக்கிறாயோ !!
இரவெல்லாம் விழித்திருப்பாயா ?
இல்லை ஓரம் பாரம் படுத்துறங்கி
ஓய்வெடுப்பாயா?
நைட் ஷிஃப்டால் தான் நிலாக்கள்
நலிந்து நட்சத்திரம் ஆகின்றதோ !!
நீ மட்டும் எப்படி
இவ்வளவு அழகாயிருக்கிறாய்?
தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்பாயா?
பௌர்ணமியன்று மட்டும் முழு முகங்காட்டும் நீ
மற்ற நாட்களில் ஏன்
முஸ்லீம் பெண்கள் போன்று
முக்காடு (பர்தா) போட்டு வருகிறாய் ?
அவ்வப்போது ஆள் காணாமல் போய் விடுகிறாயே !
அழகைப் பராமரிக்க
அடிக்கடி முகங்கழுவச் செல்கிறாயா?இல்லை
எங்கள் ஊர் விடலைகள் வெறித்துப் பார்ப்பதால்
வெட்கப்பட்டு மேகத்தினுள்
முகம் புதைத்துக் கொள்கிறாயா?
கடைசி வரை கன்னியாகவே
காலத்தை கழித்து விட போகிறாயா ?
சூரியக் குடும்பத்தில்
உனக்கேத்த உத்தமன்
இன்னும் கிடைக்கலையா?
காதல் நோய்ப்பட்ட கடல்
உன்னை கடத்திவர
அலையை அனுப்புகிறது.
உன்னை மணமுடிக்க மரங்கள்
கிளையை தூது அனுப்புகின்றன.
ஒரு
முடிவெடு;
முதிர்கன்னி ஆவதற்குள்.