ஆறு

ஆறு



விண்ணகத்துப் பெண்குழந்தை; மேக மென்னும்
மெல்லியலாள் கருவளர்ந்து மேள தாளம்
மண்ணகத்தை அதிர்விக்கப் பிறந்த வள்நான்;
மலைமங்கை மேலாடை யென்ன வீழ்ந்து
மண்ணகத்தைத் தொட்டபின்னே குதியாய்ச் சென்று
மடுமேடு காடெல்லாம் திரிப வள்நான்;
மண்ணெல்லாம் நான்தொட்டால் சிரிக்கும்; நல்ல
மாணிக்கப் பயிர்விளையும்; கொழிக்கும் செல்வம்

அணை;கட்டும் என்றுநானாய்ச் சொன்ன தில்லை
அடக்கமுள்ள பெண்மகள்நான் ஆத லாலே;
அணைக்கட்டு வேலையங்கே முடிந்த தென்றால்
ஆசையுடன் பசுமையினை ஈன்று நிற்பேன்;
நினைவெல்லாம் என்தலைவன் கடலை நாடி;
நீள்பூமி தவழ்ந்தங்கே கிடைப்ப தெல்லாம்
நினைவோடு தலைவன்கா லடியில் சேர்ப்பேன்;
நிம்மதியாய் அவன்மடியில் தலையைச் சாய்ப்பேன்;

நாகரிகம் நான்பெற்ற குழந்தை; நல்ல
நகரங்கள் நான்சேர்த்த சேர்க்கை; எங்கும்
போகவரப் படகுகளே செல்ல யாரும்
போடாத பெருஞ்சாலை யாவேன்; மாலை
மோகநெருப் புள்ளத்தே எரியக் காதல்
வேதனையில் தவிப்போர்க்கே இதம ளிப்பேன்;
மோகத்தைக் கொன்றுவிட முனையும் யோகி
முயற்சிக்கும் இடமளித்தே மகிழ்ந்து நிற்பேன்;

காராக விண்தவழ்வேன்; குளிர்ச்சி மோதிக்
கனமழையாய் மண்வருவேன்; அருவி யென்னும்
பேராக மலைதவழ்வேன்; இடங்கள் தோறும்
பெருங்குளமாய் நிலங்கிடப்பேன்; சிலபக் கத்தில்
பேராத பாறையெல்லாம் துளைத்த பின்னர்
பாதாளத் துள்ளிருந்தே எட்டிப் பார்ப்பேன்;
ஆறாக நான்நடப்பேன்; கடலைச் சேர்வேன்;
அவதாரம் பலவேதான்; மூர்த்தி ஒன்றே!

நதியென்றே போற்றிடுவார்; மக்கள் வாழ்வை
நான்நடத்துங் காரணத்தால் என்னை நாட்டின்
விதியென்றுங் கூறிடுவார்; நான்தான் மண்ணில்
வெறிகொண்டே விளையாடத் துவங்கி விட்டால்
கதியில்லை மக்கட்கே; என்றன் கோபக்
கடுமையினைத் தாங்காமல் "ஆறு" என்பார்;
இதுபோதும் என்றேநான் ஆற்றிக் கொள்வேன்
இந்தவினை வடக்கிற்கே ஏக போகம்; ;

எழுதியவர் : பொற்கிழிக் கவிஞர் சவகர்ல (31-Oct-15, 10:05 am)
பார்வை : 319

மேலே