தூரத்தில் யாரோ - Mano Red

இதுதான்
இன்றைக்கு
எழுதப்பட்ட உண்மை.

அநேகமாக,
அது இரவில் எடுக்கப்பட்ட
புகைப்படமாகவே இருக்கும்
எனக்குத் தெரியாமல்
யாருக்குப் பின்னாலோ
நான் நின்று கொண்டிருக்கிறேன்.

கதவின்
பின்புறத்தில் இருந்து
சத்தம் வருகிறது
எட்டிப்பார்ப்பது அநாகரீகம்
பல்லிகள்
பள்ளிகொண்டிருக்கலாம்.

தூரத்தில்
யாரோ நிற்பதாக
ஓர் உள்ளுணர்வு
அருகில் சென்று பார்த்தால்
தெரிகிறது என் கற்பனை..!

ஒரு ஆழ்ந்த யோசனை
என் நிமிடங்களைத் தின்றது,
எத்தனை முறை யோசித்தாலும்
நினைவில் வரவில்லை
இப்போது மறுபடியும் பசிக்கிறது.

பளிச்சென ஒரு முகம் வேண்டி
தன்னம்பிக்கையின் கண்ணாடியை
அழுத்தித் துடைத்த போது
கிடைத்தது
நொறுங்கிய கனவுகளோடு
என் ஆதி முகங்கள்.

எழுதியவர் : மனோ ரெட் (17-Nov-15, 2:58 pm)
பார்வை : 475

மேலே