எப்போதும் சந்தோஷமாக இருக்க 7 சிறந்த வழிகள்

மகிழ்ச்சி என்பது நம் மனதில் உள்ளது. அதை யாரும் நமக்கு வந்து கொடுக்கப் போவதில்லை. எந்தவிதமான சூழ்நிலையிலும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வதுதான் சந்தோஷம். கண்டதையும் போட்டு மனதை உளட்டிக் கொண்டிருக்காமல் இயல்பாக இருந்தாலே சந்தோஷம் நம்மிடம் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
சிலர் தங்கள் குடும்பத்துடன் இருந்தாலே மகிழ்ச்சியை உணருவார்கள். சிலருக்கு புத்தகங்கள் சந்தோஷத்தைக் கொடுக்கும். இன்னும் சிலருக்கு, பை நிறைய சாக்லேட் கிடைத்தால் கண்கள் விரிய சந்தோஷமடைவார்கள்.

சந்தோஷமாக இருப்பவர்கள் பொதுவாகவே யாருக்கும் தீமை நினைக்க மாட்டார்கள். பிரச்சனைகள் தரும் எந்தச் செயல்களையும் செய்ய மாட்டார்கள். அத்தகைய ஒரு 7 செயல்கள் இதோ... நீங்களும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் இவற்றைக் கடைப்பிடியுங்கள்.

பிரச்சனைகளை எதிர் கொள்ளுங்கள்
நமக்கு எந்த ரூபத்தில், எப்போது பிரச்சனைகள் வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் அவற்றைக் கண்டு நாம் பயந்து ஓடினால், அவை அப்படியேதான் இருக்கும், தீரவே தீராது. அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டுபிடித்தால், தூசி போல் அவை ஓடிவிடும்.

டூ யுவர் ஓன் பிசினஸ்
சிலர் எப்போது பார்த்தாலும் அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைத்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் கடைசியில் மூக்குடை பட்டுத்தான் திரும்புவார்கள். உங்களுக்கும் இது தேவையா? நம்ம வேலையை நாம் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். சந்தோஷம் நம்முள் தாண்டவமாடும் என்பது உறுதி.

நம் சந்தோஷம் நம் கையில்
உங்களுடைய மகிழ்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும். "ஏங்க, நான் சந்தோஷமா இருந்துக்கட்டுமா?" என்று அடுத்தவர்களிடமா கேட்டுக் கொண்டு இருப்பது? நம் சந்தோஷம் நம்மால் மட்டுமே, சோ நோ ஷேரிங்!

கெட்ட பழக்கங்கள் வேண்டாம்
நெகட்டிவாக உள்ள எந்தவிதமான கெட்ட விஷயங்களையும், எண்ணங்களையும் பழகக் கூடாது. அவை நம் வாழ்க்கையில் அறவே குறுக்கிடக் கூடாது. ஒருவேளை குறுக்கிட்டால், உங்களுக்குப் பிடித்தவற்றை நினைத்தோ அல்லது பார்த்தோ ஒரு புன்னகை மட்டும் செய்யுங்கள்; அவை ஓடிப் போகும். மேலும், கெட்ட எண்ணங்கள் கொண்டவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ளக் கூடாது.

மறப்போம், மன்னிப்போம்
நமக்கு யாராவது கெடுதல் செய்யும் போது, வரிந்து கட்டிக் கொண்டு அவர்கள் மேல் பாயக் கூடாது. பொறுமை என்பது நமக்கு மிகமிக அவசியம். கெடுதல் செய்பவர்களை மன்னித்து, மறந்து விடுங்கள். மன்னிப்பு தரும் சுகமே தனிதான்!

பாஸிட்டிவ் மனப்பான்மை
இந்த உலகில் ஒருவரையொருவர் விமர்சனம் செய்வது எப்போதும் நடப்பதுதான். ஆனால் இத்தகைய விமர்சனங்களை பெர்சனலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவற்றை பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு, அடுத்தகட்டத்தை நோக்கி போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

பழி வாங்கும் எண்ணம் கூடாது
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பழி வாங்கும் எண்ணம் துளி கூட வராது. ஒருவர் உங்களை ஆழமாகக் காயப்படுத்தி இருக்கலாம். அதற்காக, கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்று பழி வாங்கும் எண்ணத்தோடு இருந்தால், அது நம் எதிர்காலத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது. போனாப் போகுதுன்னு மன்னித்து விடுங்கள். எப்போதும் சந்தோஷமாக இருங்கள்!

எழுதியவர் : செல்வமணி - மீள் பதிவு (20-Nov-15, 7:43 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 1203

மேலே