என்ன எழுதுவது என்று தெரியாமல் இதை எழுதினேன் - உதயா

(ஒய்வு நேரத்தில் மட்டும் இந்த கட்டுரை பக்கம் வாருங்கள், ஏனெனில் இந்த கட்டுரையில் பெரிதாக எதுவும் இல்லை. பகிர நினைத்தால் கூட .. இதனை முழுமையாய் வாசிக்காமல் செய்யாதீர்கள், வாசகர்களுக்கு மட்டும் ஒரு வித்தியாசமான விருந்தாக இந்த கட்டுரை இருக்கும் என நம்புகிறேன் )


தினந்தோறும் எதவாது ஒரு கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்துவிடும். ஆனால் எதை பற்றி எழுதுவது என்று கூட தெரியாமல் ஒரு பேப்பரையும், பேனாவையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்வேன். அதன் பிறகு என் வீட்டின் அறையிலோ , வீற்றிக்கு வெளியே உள்ளது காலியிடத்திலோ அமர்ந்துக்கொண்டே யோசனை செய்ய துவங்குவேன்.

சில நேரங்களில் வீட்டினுள் அமர்ந்திருக்கும் போது , பேசாமல் இன்று கவிதை எழுத வேண்டாம். நம் வாழ்க்கையை ஒரு கட்டுரையாக எழுதலாம் என்றும் தோன்றும். இந்த வைகாசி வந்தா சென்னைக்கு வந்து நான்கு வருடம் முடிவடையப்போகிறது. என் படிப்பு செலவிற்காக என் அப்பா வாங்கிய கடனும் , சென்னையிலே ஒரு 1200 சதுர அடியில் வீட்டு மனை வாங்கி அதிலே குடிசை போடுவதற்கு வாங்கிய கடனும் தீர்வதாய் தெரியவில்லை.

எங்கள் ஏரியாவில் என் வீடும் மட்டும்தான் குடிசை , அதுவும் கொஞ்சம் ஏரியோரம், வெயில் காலங்களில் கொஞ்சம் காற்றோட்டமாக இருக்கும். இன்னும் சொல்லப் போனால் பஞ்சபூதங்களும் என் குடிசைக்கு அழையா விருந்தாளிகள் . எப்படி என்றுதானே கேள்வி எழுகிறது. பொறுங்கள் நானே சொல்கிறேன்

முதலில் நிலம்
------------------------

என் வீட்டில் இருப்பதோ மண் தரைதான். அம்மா பாவம் தினமும் கஷ்டப்பட்டு மாட்டு சாணம் கொண்டு நன்றாக கரைத்து அதில் ஒரு துணியை நனைத்து வீடு " மொழுவுவாள் " . ஆனால் இந்த எலிகள் இருக்கிறதே , அவைகள் சும்மாவே இருப்பதில்லை , அதன் வேலையை நன்றாக செய்துகொண்டே இருக்கும். எத்தனை வலைகள் வேண்டுமானாலும் தோண்டி வைத்துவிடும்.
இப்போ அவைகள் பார்ட் டைம் வேலை கூட பார்க்கிறது . என் சட்டைகளை கடித்து வைப்பது

இரண்டாவது நீர்
------------------------

மழை வந்தால் எங்கள் அனைவரையும் எழுப்பிவிடுவான் . எங்கள் அனுமதியின்றி நேரயடியாக வீற்றிக்கு உள்ளேவும் வந்துவிடுவான். எவ்வளவு நேரம் என் வீட்டில் விலையாடிச் சென்றாலும், கடைசியில் செல்லும் போது சோகமாகவே செல்வான். ஏனெனில் அவனால் இறுதிவரைக்கு என் தங்கையை எழுப்பவே முடியாது. நான் , அப்பா , அம்மா , அண்ணன் மட்டும் அவன் செய்யும் செயலை வேடிக்கை பார்ப்போம். வழக்கம் போல் என் தங்கை எங்கள் யாராவது ஒருவர் மடியில் குழந்தையாகி இருப்பாள் அவன் செல்லும் வரைக்கும். ஒரு வகையில் மகிழ்ச்சியாகவும் இருக்கும் 18 வயது என் தங்கைக்கு, ஆனால் அவள் என்று எங்களுக்கு குழந்தை என்பதை அடிக்கடி நினைவுபடுத்தும் மழையைக்கண்டு.

மூன்றாவது நெருப்பு
-------------------------------

தினந்தோறு அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடும் என் வீட்டின் விறகு அடுப்பில் அந்த நெருப்பு, இப்போது குளிர்காலம் வேறா , காலையில் எழுந்ததும் எல்லோரும் அடுப்பு பக்கம் சென்றுவிடுவோம். அந்த காலையிலே தொடங்கிவிடும் எனக்கும் என் தங்கைக்கு இடையேயான சண்டையும், வழக்க போல இதில் தலையிடாமல் ஒதுங்கிவிடும் அப்பாவும் , அவருக்கே உரித்தான அந்த மௌனப் புன்னகையும் ( அவருக்கும் ஒரு அக்கா மூன்று தங்கைகள் உண்டு , அதனால் அவருக்கும் அவரின் பழைய நினைவுகள் திரும்புகிறதோ என்னவோ ..?) , அம்மாவைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை, உங்களுக்கே தெரியும் எல்லாம் அம்மாவும் ஒரு மாதிரிதான். முதலில் கொஞ்சம் திட்டுகள் விழும் , உடனே கொஞ்சம் சிரிப்பொலியும் உதிரும் .

நான்காவது காற்று
--------------------------------

என் அப்பா வீடு கட்டும் போது ஒரு சன்னல் கூட வைக்கவே இல்லை. ஆனால் இப்போது என் குடிசையில் என்னால் எண்ண இயலாத அளவுக்கு சன்னல்கள். நான் சன்னலை திறக்க வேண்டும் என்ற அவசியமும் என் அனுமதியும் காற்றுக்கு தேவையில்லை. அதுவாக வரும் அதுவாகவே சென்றுவிடும்

ஐந்தாவது ஆகாயம்
-----------------------------------

என் சிறிய வயதில் கிராமத்தில் வாழ்ந்தேன், அங்கெல்லாம் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியேதான் படுத்துக்கொள்வோம், நான் அப்படியே நட்சத்திரங்களையும் ரசிப்பேன், ஆனால் இங்கோ என் வீற்றிக்கு உள்ளே படுத்துக்கொண்டு திருட்டுத்தனமாக ரசிப்பேன் . பாவம் நட்சத்திரம் நான் சைட் அடிப்பது அவைகளுக்கு தெரியாது.

சரி கதையே எழுதலாம் என நினைக்கும் போது தான் தெரிந்தது " நெட் balance " நாளையோடு முடிகிறது என்று. " போன செமஸ்டர் லீவில் வீடு கட்டுற வேலைக்கு போயி " 2500 ரூபாய் சம்பாரித்தேன் . புத்தகங்கள் வாங்கவே பாதி பணம் செலவாகிவிட்டது, மீதி இருந்த பணத்தில் இதுவரைக்கும் நெட் யூஷ் பண்ணேன். இப்போ பணம் சுத்தமாக தீர்ந்துவிட்டது ... ம்ம்ம்ம்ம்ம்ம் " நெக்ஸ்ட் வீக் .. மறுபடியும் வேலைக்கு போனும் " .

அடடா நாம வேலைக்கு போறதையே கதையா எழுதலாமே என்றும் ஒரு யோசனை வந்தது. அப்புறம் ஏனோ அப்படி எழுத வேண்டாம் என்றும் தோன்றியது. ஒருவகையாக கவிதை எழுதலாமா இல்லை கதை எழுதலாமா என்ற குழப்பத்தில் இருந்து மீண்டு , கவிதை என முடிவு செய்து எழுத தொடங்கினேன்.

தலைப்பு கடைசியாக எழுதிக்கலாம் முதலில் கவிதை எழுதுவேன் என, எதோ ஒரு கரு பொருளை மனதில் நினைத்து எழுத தொடங்கினேன் . ஒரு 40% கவிதை எழுதிவிடுவேன் அதன் பிறகு வோறொரு கருப்பொருளுக்கு கவி தானாக தாவி விடும். சரி என்ன செய்வது அதையே எழுதிவிடுவேன்.

சில நேரங்களில் , இன்று ஒரு எண்ணம் பகுதி போடலாம் என்று " அப்போ இருக்குற டென்ஷன்ல கட கடவென்று " ஒரு 10 நிமிடத்தில் எழுதியதை எண்ணப் பகுதியில் "டைப்" பண்ணி முடிச்சதும் , சமர்ப்பியை சொடுக்கும் போதுதான் தெரியும். அட இதுவே நல்லா இருக்கே கவி மாதிரி என்று

சரி எது எப்படி இருந்தாலும் , கவிக்கு பொருந்துற மாதிரி ஒரு இமேஜ் சூஸ் பண்ணனும். இன்னும் சில நேரங்களில் இமேஜ் பார்த்து ஒரு கவிதை வந்துடும்.ஆனால் இன்று எப்படி எழுதுவது என்று விளங்கவில்லை.

அப்படியே facebook பக்கம் போனேன் அங்கு பார்த்த ஒரு இமேஜ் . இந்த இமேஜ்க்கு கவிதையோ கதையோ எழுத தேவையில்லை, இந்த இமேஜ்யே ஆயிரம் கவிதை சொல்கிறது. என்ன என்னமோ யோசிக்க வைக்கிறது. ஒரு சரித்திர பாடத்தை மிக சாதாரணமாக சொல்லிவிட்டு போனது.

நீங்களும் பாருங்கள் அந்த இமேஜ் - யை . ( மேலே உள்ள படம் தான் அது )

- உதயா

எழுதியவர் : உதயா (21-Dec-15, 10:55 am)
பார்வை : 139

சிறந்த கட்டுரைகள்

மேலே