அன்பின் முகவரி அழகிய ராட்சசிகள்-கார்த்திகா

"வச்சது வச்ச இடத்துல இருக்கறது இல்ல...
எனக்கு மட்டும் என்ன நாலு கையா இருக்கு?நானும் வேலைக்குப் போறேன்....
சும்மா வீட்ல உட்கார்ந்துட்டு இல்ல...ராகுல் நான் கேட்கறது உனக்கு காதுல விழுதா இல்லையா?"

கோபத்தில் கத்திய மதுமிதாவை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் ஷேவ் செய்வதில் மூழ்கினான் ராகுல்...

"நான் பாட்டுக்கு இங்க கத்திட்டு இருக்கேன் ...நீ என்னைக் கண்டுக்கறதே இல்ல...காலைல எழுந்து நான் எத்தனை வேலை தான் செய்றது?அதுபோக எதுவும் அதது இருக்க வேண்டிய இடத்துல இருக்கிறது இல்ல...இந்த நாய் கூட..."
ராகுல் மடி மேல் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த நாய்க் குட்டியை விரட்டினாள் மது.....

அவசர அவசரமாக டிபன் செய்து ஹாட் பாக்சில் வைத்துவிட்டு மதியத்திற்கு வெங்காய சாம்பாரும் வெண்டைக்காய் பொரியலும் ரசமும் சுட்ட அப்பளமுமாய் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவளை
மெல்ல நெருங்கினான் ராகுல்...

இன்டக்ஷன் ஸ்டவ்வில் பாலை சூடேற்றி காபி கலந்து நீட்டியவளை புன்னகை மாறாமல் வாங்கிக் கொண்டவன் முதல் டிகாசனின் மணத்துடன் உறிஞ்சத் தொடங்கினான்....

எவ்வித சலனமுமின்றி அவனை நோக்கிவிட்டு வேகமாக பெட்ரூமிற்குள் சென்று உடைமாற்றி தலைசீவி லிப்ஸ்டிக் ஐ ப்ரோ சரிசெய்து நகர்கையில்,

காலடியில் புடவையின் மடிப்புகளை சரி செய்து கொண்டிருந்தது ராகுலின் கரங்கள்.....கையில் தட்டோடு எடுத்து வந்திருந்த இட்லிகளை ஊட்டத் தொடங்கிய அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு சாப்பிடத் தொடங்கி இருந்தாள் அவள்....

நேரமாகி விட்டதை உணர்ந்து வீட்டைப் பூட்டிக் கொண்டு அவள் ஸ்கூட்டியிலும் அவன் காரிலும் பை சொல்லி நகர்ந்தபோது வாசலில் பவளமல்லி பூச்சொரிந்து கொண்டிருந்தது....

அடுத்த 30 வது நிமிஷம் ஆபீசில் நுழைந்து சீட்டில் உட்கார்ந்து ஹாயாக மொபைல் எடுத்து டயல் செய்ய முனைகையில்,

"என்னடா ஆபீஸ்க்கு ரீச் ஆகிட்டயா?"குறுஞ்செய்தி ராட்சசியிடமிருந்து... .

டயல் செய்திருந்ததை மீண்டும் அழுத்தி "நீ டா தங்கோ ......"

மீண்டும் கொஞ்சத் தொடங்கி இருந்தன செல்லக் கிளிகள்....

எழுதியவர் : கார்த்திகா AK (25-Dec-15, 11:44 am)
பார்வை : 185

மேலே