அர்த்த ராத்திரியில் ஒரு புத்தன் எழுகிறான்
அர்த்த ராத்திரியில்
ஒரு புத்தன் எழுகிறான்-சப்த நாடியில்
ஒரு சித்தன் வாழ்கிறான்....
கேள்வி கேட்பதும் ஞானம் என்கிறான்
பதிலறியா புன்னகையும் ஞானம் என்கிறான்.....
அத்தனைக்கும் ஆசைப்படு
என்கிறான் ஒருவன்
எதற்கும் ஆசைப்படாதே
என்கிறான் ஒருவன் ....
ஆடி அடங்கி சரியும் போது
சாயுமிடம் பிடி மண் தானே
புழுவுக்கும் நீ ஊன் தானே ....
சந்தனத்தில் எரிந்தாலும்
சாம்பலுக்குள் சாந்தி தானே..
அந்தரத்தில் ஆடினாலும்
ஆறடிக்குள் அடக்கம் தானே....
இன்பமெல்லாம் இன்பமில்லை
துன்பமெல்லாம் துன்பமில்லை
எல்லாம் கடந்து போகுமென்று
எவரும் வாழ்வை வெறுப்பதில்லை....
அர்த்த ராத்திரியில் ஒரு புத்தன் எழுகிறான்
சப்த நாடியில் ஒரு சித்தன் வாழ்கிறான்....