உனக்கென்ன குறை
உனக்கென்ன குறை ?
- திருச்சி ஏ எம் அப்துல் காதர் ஹசனி
அனேக நபர்களை
ஏதோ ஒரு நோய்
ஆட்கொண்டு
ஆட்டுகிறது !
உடல் நோவலால்
உருண்டு பிரண்டு
கத்தி கதறும்
உடல் நோயுமல்ல !
மூளை
முடங்கியதால்
விளைந்த
மன நோயுமல்ல !
நன்றி மறந்தால்
வரும்
மனஇறுக்க
நோய் !
மனிதனுக்கு
தன்னலம் தாண்டி
பிறர் நலம் நோக்கும்
பொது நலம் குறைவு !
ஆனால் தன்னிலை
மறந்து பிறர் நிலை
யோசிக்கும்
பொது நோய் அதிகம் !!
இதயக்கண்ணை
இறுக்கமாய் மூடிவிட்டால்
புறக்கண்ணில்
ஒன்றும் புலப்படுவதில்லை !
மனக்கதவுகளை
தாளிட்டுக்கொண்டால்
புறசெவிகளால்
பலனேதுமில்லை !
கண்ணருமை
தெரியும்
கடும் இருளில்
தடுமாறும்போது !
செவியருமை தெரியும்
கடும் இரைச்சலில்
தான் பேசுவது
தனக்கே கேட்காத போது !
மூச்சு விடும் கணங்களும்
பேச்சு வரும் கணங்களும்
உனக்கு சாதகமற்று
போகும் போது தான்
அதன் கனங்கள் புரிய வரும் !
நீரற்ற நிலம்போல்
காற்றற்ற ஆகாயம் போல்
எத்தனை நாள் தான்
வறண்ட மனதோடு
வாடிக்கொண்டே இருப்பாய்?
உறக்கம் தவிர்த்த
இறுக்கம் எடுத்த
காய்ந்த இதயங்களில்
காட்சிகள்
எதுவும் தெரியாது !
நன்றி உணர்வு
அற்றவனுக்கு
நண்பன் கூட
எதிரி !
வாழ்வை நன்றி உணர்வோடு
எதிர்கொள் !
உன் எதிரி கூட
நண்பன் !
உனக்கென்ன குறை
என்று யாரும் கேட்கும் முன்
எனக்கென்ன குறை ? என்று
உன்னையே நீ கேள் !
கஷ்டங்களை மென்று விடுவாய் !
வாழ்வை வென்று விடுவாய் !