குறைகளெல்லாம் குறைகளன்று

குறைகளெல்லாம் குறைகளன்று

பாவலர் கருமலைத்தமிழாழன்

காதிரண்டும் கேளாத பீத்தோ வன்தான்
----காதில்லை எனச்சோர்ந்தோ அமர்ந்தி டாமல்
மேதினியோர் வியக்கின்ற சிம்போன் என்னும்
----மேன்மையான இசையளித்தே புகழைப் பெற்றார் !
வீதிதனில் நடப்பதற்கே ஒருகால் இல்லா
----விட்டாகர் மனம்தளர்ந்தே அமர்ந்தி டாமல்
சாதிக்கும் முயற்சியுடன் எவரெஸ்ட் ஏறி
----சாதனையைப் படைத்திட்டார் செயற்கைக் காலில் !

படிப்புனக்கோ ஏறாதென் றேசிக் கற்கும்
----பள்ளிவிட்டே அனுப்பிவிட்ட ஐன்ஸ்டின் என்பார்
இடிந்துமனம் தளர்ந்திடாமல் முயற்சி செய்தே
----இணையில்லா அறிவியலின் அறிஞரானார் !
படிப்பதற்கே வசதியில்லா பார்டே என்பார்
----பகலெல்லாம் அச்சகத்தில் பணியை யாற்றி
அடிமனத்துள் இருந்திட்ட ஆர்வத் தாலே
----அற்புதமாய் மின்காந்தம் கண்ட ளித்தார் !

உள்ளத்தில் உறுதியென்னும் உயிர்ப்பி ருந்தால்
----உடற்குறையோ குறையாக இருந்தி டாது
பள்ளத்தில் விழுந்தாலும் முடியும் என்றால்
----படிக்கற்கள் வந்துன்றன் முன்னே நிற்கும்!
வெள்ளம்போல் சோதனைகள் உனைச்சூழ்ந் தாலும்
----வெறியோடே எதிர்த்துநின்றால் வழியைக் காண்பாய்
எள்ளல்கள் முயலுமுன்றன் அடிவ ணங்கும்
----என்றென்றும் உழைப்பொன்றே உனையு யர்த்தும் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Jan-16, 7:39 pm)
பார்வை : 67

மேலே