எண்ணத்தில் துளிர்த்தவை - 5
இருளும் ஒளியும்
@-@-@-@-@-@-@-@
இருளென்பார் வாழ்வை இதயம் அழும்நேரம்
--ஒளிமிகு வாழ்வென்பார் உவகைப் பொழுதில் !
இருளும் ஒளியும் இயற்கை நிகழ்வெனிலும்
--இயலுமே பூமியில் செயற்கை முறையிலும் !
இன்பமும் துன்பமும் இருவழி சாலையே
--இருளும் ஒளியும் இணைந்த பாதையே !
இதயம் சோர்ந்தால் ஒளியும் இருளாகுமே
--இருளைக் கடந்தால் காலமும் ஒளியாகுமே !
இருளும் ஒளியும் நிலையிலா நானிலத்தில்
--இரண்டும் தேவை வாழ்ந்திட வையத்தில் !
இலக்கை வகுத்து இடரின்றி பயணித்தால்
--இரவும் பகலாகும் இமயமும் இம்மியாகும் !
இருளும் இடரென்று இதயத்தில் கொள்ளாதே
--இரவில்தான் விடுதலை பெற்றோம் மறவாதே !
இரவும் பகலும் இயற்கையின் கொடைதானே
--இன்றும் என்றும் நடைபோடு வெற்றியுமதே !
பழனி குமார்
22. 01.2016