இதோ மன்னிப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
இதோ மன்னிப்பு
எதையதையோ எழுதுகிறாய்
என்னைப் பற்றி
எழுத கூடாதா ? என
எழுதுகோல் கேட்டது!
எழுதுகோல் கேட்டும்…
எழுதவில்லை என்றால்
என்றாவது ஒருநாள்
ஒத்துழையாமை இயக்கத்தில்
இணைந்து விட்டால்
எழுதுவது எங்ஙனம்
என்றே எழுதலானேன்!
ஒண்ணே முக்கால் அடியில்
உலகத்தையே வியக்கவைத்த
உலகபொதுமறை தந்த
பொய்யாமொழி புலவரின்
பொக்கிஷமல்லவா நீ !
கற்பனை வளத்திலும்
கவிநயத்திலும்…
கோலோச்சிய புலவன்
கம்பனின் கரங்களில்
கதகளி ஆடிய அழகே !
இளமழலைகளின்
கிறுக்கல்களுக்கும்…
இளைஞர்களின் காதல்
கிறுக்கல்களுக்கும்
இணைந்தல்லவா இருக்கிறாய்!
புரட்சியாளர்களிடமும்..
புதுஇலக்கியம் படைப்பவரிடமும்
இருக்கின்ற எழுதுகோலே !
என்றும் வாழ்கவே!
இதயத்தின் அருகிலேயே
இணைபிரியாது இருந்தும்
இந்நாள் வரை எழுதாமல்
இருந்த தற்கு இங்கே
இதோ மன்னிப்பு !
---- கே. அசோகன்.