புறநானூறு பாடல் 1 - கடவுள் வாழ்த்து
புறநானூற்றில் இடம்பெறும் முதல் பாடலான கடவுள் வாழ்த்துப் பாடிய புலவர், பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவராவார். இவரது இயற்பெயர் பெருந்தேவனார் என்பதாகும். தமிழில் பாரதத்தைப் பாடியிருப்பதால் இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனப்படுகிறார்.
பாரத வெண்பா என்னும் நூலும் இவர் பாடியதென்று கூறுவர். இவர் சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றுக்கு கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் ஆவார். இவர் பெரும்பாலும் சிவனையும், முருகனையும் பாடியிருக்கின்றார்.
இனி பாடலைப் பார்ப்போம்.
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பிற் றாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியு மவ்வே றென்ப
கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை 5
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே 10
எல்லா வுயிர்க்கு மேம மாகிய
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. 13
பொருளுரை:
கார்காலத்தில் மலரும் நறுமணம் உடைய கொன்றை மலர்ச் சரத்தைச் சூடியும், மனம் கவரும் நிறத்தையுடைய அழகிய மார்பின் மீது கொன்றைபூ மாலை அணிந்தவன். பயணம் செய்யும் தூய வெண்மை நிறமுடைய காளை வாகனமும், அக்காளையின் வடிவமே சிறப்பும், பெருமையும் பொருந்திய கொடியும் உடையவன்.
ஆலகால நஞ்சினை உண்டதனாலும், அது கழுத்தின் கண்டத்தில் நின்றதனாலும் ஏற்பட்ட கறுப்பு நிறமான கறை, பெருமானின் அழகிய கழுத்திற்கு அழகு செய்ததும், அக்கறுப்பு நிறக்கறை, வானோரின் உயிர் பிழைக்கக் காரணமானதனால், வேதம் பயின்ற அந்தணர்களால் புகழப்படுபவன்.
பெண் வடிவம் பெருமானின் ஒரு பக்கமாகவும் ஆகி, அவ்வடிவம்தான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே இருத்தி மறைத்துக் காத்து வைக்கப்பட்டும், சந்திரன் இறைவனது தலையில் இறைவனால் சூடப்படுதலால் அழகாய் ஆகி பதினெண் கணங்களாலும் புகழ்ந்து பேசப்படுபவன்.
எல்லா உயிர்களுக்கும் காவலாகிய, எந்நாளும் குறையாத கங்கையை உடைய கமண்டலமும், நீண்ட திருச்சடையும் சிறப்புமுடைய அருமையான தவத்தையுடைய முதல்வனை வணங்கி வாழ்த்துவோம். இப்பெரியோனை மனம், மொழி மெய்களால் வணங்க அறம், பொருள், இன்பம், வீடு நான்கும் பயக்கும்.
குறிப்பு:
பதினெண்கணங்கள் யாவர்? தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதர், வேதாளம், தாராகணம், ஆகாசவாசிகள், போகபூமியோர் ஆவர்.