ஞாபகத்தில் வந்தவை

கறவை மாடுகள் நான்கு
எங்கள் வீட்டில்
இருந்தன அப்போது..

அம்மாவோடு பால் ஸ்டோருக்கு
அமைதியாகப் போய் வரும்
அந்த மாடுகள்..

அம்மா கொஞ்சம் முன்னாடியே
வீட்டுக்கு வந்து விட்டாலும்
தாமாகவே வீட்டுக்கு வந்து சேரும்!

கூட்டுறவு வங்கியில்
மாடுகள் வாங்க வாங்கிய கடனுக்கு
நிலுவைகளுக்காக விற்கப்பட்டன ஒவ்வொன்றாக !

யாரோ எவரோ வாங்கினாலும்
தினமும் எங்கள் வீடு கடந்து செல்லும்
அவைகள் ஏக்கமாக என்னை பார்த்து செல்லும்!

என்ன ஆனதோ..அவைகளை அப்புறம் நான்
பார்க்கவும் முடியவில்லை ..
அம்மாவும் அப்பளம் இடுவதற்கு மாறிவிட்டாள்!

இன்றைக்கும் அந்த மாட்டு தொழுவத்தில்
முன் வாசலில் ..என் பழைய வீட்டுக்கு
போகும் போதெல்லாம் ஞாபகம் வரும்..

வாஞ்சையோடு என்னை பார்த்த
அம்மாடுகளின் கண்களும் ..
அப்பளமிட்டே உருக்குலைந்த அம்மாவின் முகமும்!

எழுதியவர் : கருணா (பாலகங்காதரன்) (17-Mar-16, 2:17 pm)
சேர்த்தது : கருணாநிதி
பார்வை : 239

மேலே