புன்னகைப் பூமகள்

இயற்கும்மி

புன்னகைப் பூமகள் பூங்குழ லிற்புது
...புன்னிய காவியம் வாசிக்கி றேன் !
என்னவள் தந்திடு மின்பமெ லாமந்த
...ஏடுகள் நல்குமா ? யோசிக்கி றேன் !

மின்னலை யொத்தவள் கன்னங்க ளிற்சுதி
---மீட்டுமி சைகண்டு பூசிக்கி றேன் !
கன்னலி தழ்கொண்டு காயங்க ளாற்றிட
---கன்னியின் பொன்னிதழ் யாசிக்கி றேன் !

முத்துச்சி ரிப்பெழில் பெற்றும கிழ்ந்திட
---முன்னிலும் பின்னிலும் தத்துகி றேன்
பித்தனைப் போலவள் பிஞ்சுப்ப தத்தினை
---பின்னிப்பி டித்துநான் கத்துகி றேன் !

எத்தனை நல்லெழில் ஏந்துகின் றாளவள்
---எத்தனை யின்பங்கள் காட்டுகின் றாள்
வித்தக னென்னையும் வீழ்த்துகின் றாளவள்
---விந்தைகள் நெஞ்சினில் கூட்டுகின்றாள் !

வண்ணக்க ளஞ்சிய வார்ப்பனை யேயந்த
---வஞ்சிக ழுத்தினிற் சூடுகின் றாள்
எண்ணத்தி லேநின்று பாடுகின் றாளவள்
---என்னுடன் சேர்ந்துற வாடுகின் றாள்

விண்ணிற்றி ரிந்திடும் மீனினைப் போலொளி
---வீசிடு மன்னவள் கண்கள டா !
வெண்ணில வுங்கர்வங் கொண்டிடு மேயவள்
---வெட்கத்திற் கேங்குவர் பெண்கள டா !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (4-Apr-16, 12:10 pm)
பார்வை : 86

மேலே