விசித்திரக்கொலையின் நிறுவல்கள்

பனிக்குமிழின்
சுவையறியும்
அலாதியாகவே
கொலைகளை
ரசிக்கிறேன்!!!

பைத்தியம்
தீவிர ரசனையின்
உச்சகட்டமே...

நிறுத்தவில்லை
ரசிப்பதையும்
கொலைகள்
நிகழ்வதையும்
இதுவே நியதியும்கூட!!!

நியதிகளை
நேசிப்பதால்
எனை
இழந்திருக்கிறேன்...

விழிகளறிந்தவரை
கொலைகளுக்காக‌
கண்ணீர் விழுந்ததில்லை!!!

அழுகை
உயிரினை
மீளுருவாக்க‌
போவதேயில்லை...

கொலைகளை
ரசிக்க ப்ரியம்
கணக்கிட்டதில்லை!!!

பொழுதுபோக்கில்
லாப நட்டமெதற்கு...

பூங்காவில்!சமயலறையில்!
புதரில்!கழிவறையில்!
கழிவுக்குழியில்!என்
படுக்கையறையிலும்
கொலைகளை
பார்வையிட்டிருக்கிறேன்!!!

சம்பவ இடங்கள்
வரலாற்று சர்ப்பத்தின்
வயிறுகள்.....

புணர்கையில்
நிகழும் கொலைகளே
புருவம்
உயர்த்தச்செய்யும்!!!

காமம்
மரணம்
சனத்தொகையின்
சமத்துவ தராசு
சட்டிகளே..

சாட்சியமாய்
அழைக்கவில்லை
என்பதை பார்க்கிலும்
கொலைகளுக்காய்
வழக்கே நடந்ததில்லை
என்பதே சுவார்ஸ்யம்!!!

கற்பழிப்பு
வழக்கிற்கு
தீர்ப்பு கிடைப்பதில்லை
வருந்துவதற்கும் யாருமில்லை...

கத்தி தீட்ட‌
கற்றதெல்லாம்
கொலைகளிலிருந்து
கொல்லாமலிருக்க‌
சொல்லித்தந்ததும்
கொலைகளே!!!

ஆக கொலைகள்
புனிதமானவையே....

மாலையிலிருந்து
ஒரு கொலை
மிகக்கொடூரமாக‌
நிகழ்கிறது!

எப்படியேனும்
இரவுக்குள்
பெருவண்டை
கொன்றுவிடும் சிலந்தி
சிலந்தியை
தின்றுவிடும்
பல்லி!

இதற்க்காகவே
எனதறையில்
ஒட்டடை
தட்டப்பட்டதில்லை..

கொலைகளால்
பூமி
ரட்சிக்கப்படுகிறது
ரசிக்க தயாரெனில்

தீவிர ரசனையின்
உச்சகட்டமென‌
யாவராலும் நீங்கள்
அழைக்கப்படலாம்

எழுதியவர் : புலவூரான் ரிஷி (4-May-16, 12:16 am)
பார்வை : 49

மேலே