அழகை ரசிக்க மூடு Mood அவசியமா

காதல் செய்யும் போது இந்த உலகமே அழகாகத் தெரிந்தது. அந்தப் பருவத்தில் பன்னியும் அழகாய்த் தெரியும் என்று என் பாட்டி சொல்லக் கேட்டதும் ஞாபகம் வருகிறது , அதனால் அதை அப்படியே விட்டு விடுகிறேன் .உலகிலேயே அவரவர் மனதின் அளவுகோல்தான் அழகைத் தீர்மானிக்கின்றன. என்கிறார்கள் மனோதத்துவியலாளர்கள். ஆனந்தமான நிலையில் இருக்கும்போது இந்த உலகத்தில் அத்தனையுமே அழகுதான் என்கிறது ஆன்மீகம் .படைப்பின் ரகசியங்கள் அத்தனையுமே அழகியலைச் சார்ந்ததுதான் என்கிறார்கள் கடவுளைக்கூட ஒத்துக்கொள்ளாதவர்கள் .எல்லாம் சரிதான் என்று போல நமக்குத் தோணினாலும் ,அழகு என்பதைச் சிந்திக்கும் போது எல்லோரும் ஏக மனதாய் ஒத்துக்கொள்ளும் விசயம் புற விசயங்களைக் கடந்த அகவியலோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள்.

இயற்கை அழகு என்ற ஒரு உணர்வைக் கொடுத்ததே ஏதோ ஓர் உள்நோக்கம் கொண்ட விளையாட்டின் உச்சமாயும் , தந்திரமான வலைப்பின்னலுமாய்த் தெரிகிறது . அதற்காகக் கவர்ச்சியையும் அழகையும் எங்கும் ஒன்றாகப் பார்த்து விடவும் கூடாது. நமக்கு எது அழகாகத் தெரிகிறது? எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். நாம் திரும்பத் திரும்ப விரும்பிப் பார்க்கும்படியாக ஒன்று இருந்தால் அதுவே அழகு என்று அர்த்தம்.

இங்கே நாம் அழகின் ஆதாரத்தைத் தேடி ரொம்ப வேகமாய்ப் போகிறோம் என்பதாய் எனக்குத் தோணுகிறது ... அதனால் மெல்ல ஒரு சின்ன விசயத்தில் ஆரம்பிப்போம் .கடந்த ஆண்டு Paulina Vega (Paulina Vega Dieppa ) என்ற பெண் மிஸ் யுனிவர்சாகத் தேர்வு செய்யப்பட்டார் .( நமக்குதெரியும் அந்த அழகிப் போட்டிக்கு ஒரு பெண்ணைத் தேர்வு எதெல்லாம் மிக முக்கியமாக வைத்துள்ளார்கள் என்பதை அதைப் பார்த்தவர்களுக்கும், படித்தவர்களுக்கும் விட்டுவிடுவோம் ! ) ஆனால் அந்தப் இந்தப்பெண் நமக்கு அப்படி ஒன்றும் அழகாகத் தோணவில்லை. காரணம் அவள் அவள் கொலம்பிய பெண் என்பதாலா ?

இல்லை வெளியில் பார்க்கும் அழகுக்கும் நம் மனதின் வாசனை என்று சொல்லப்படும் ஏற்கனவே உள்ள பதிவுகளுக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது . நாம் பார்க்கும் விசயங்கள் சகலமும் மனதின் ஏற்கனவே இருக்கும் சில ஆதாரங்களுடன் இடத்துக்குத் தகுந்தாற் போலவும், பார்க்கும் பொருளுக்குத் தகுந்தார் போலவும், அப்போது தோன்றும் மனதின் எண்ண இயல்புக்குத் தகுந்தார்போலவும் தோன்றியதெல்லாம் பதிந்துகொள்கிறது . நல்ல மன நிலையில் ( மூடில் ) அது வெளியே செயல்படுகிறது .

அப்படி ஒன்றும் அவள் அழகில்லை !

அழகை பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்த்த நமக்கு முந்தைய தலைமுறை நேரில் பார்க்காத ஏழாம் கிளியோபாட்ரா அழகி என்று நம்பிக்கொண்டு இருந்தது. கிரேக்கத்தைச் சேர்ந்த புளூட்டாக் ( Plutarch ) என்ற வரலாற்று மற்றும் வாழ்வியல் ஆய்வியல் ஆசிரியனுக்கு அதுவும் பிடிக்கவில்லை ! கிளியோபட்ரா நீங்கள் நினைக்கும் அளவுக்கு அப்படி ஒன்றும் அழகில்லை (Cleopatra was melodic, intelligent, charming and charismatic. But not a jaw-dropping beauty, like Elizabeth Taylor up above.And she was slender and not too tall. என்று அந்த கனவையும் கலைத்தான் என்பது வேறு விசயம் .

அடுத்து அந்த அளவுக்கு யாரும் பேசப்படாவிட்டாலும் மர்லின் மன்றோ (Marilyn Monroe ) என்ற அழகி அந்த இடத்தை நிரப்பிவிட்டதாக நம்பிக்கொண்டார்கள். ஆனால் நம் முந்தைய பெரிசுகளை அவ்வளவு கிறங்கடித்த, அத்தனை பேரழகியாகப் பார்க்கப்பட்ட மர்லின் மன்றோ “I'm pretty, but I'm not beautiful. I sin but I'm not the devil. I'm good, but I'm not an angel” என்று பொதுவில் தன் அழகையே போட்டு உடைத்தாள்.

நன்றாக யோசித்தால் , கைகளில் அள்ளிய மழை நீர் போல, இதுதான் அழகு தீர்மானிக்கும் முன் அது மனதின் வழியே வழிந்து ஓடிப்போய் விடுகிறது…ஒருவேளை அழகு இலக்கணத்தோடு பிறந்து இருந்தால் அதை இலக்கியம் கட்டிப்போட்டு இருக்கும்.

மின்னல் அரசி’யாம் சீதை !

எப்படியாவது அழகின் நதி மூலம் கண்டுபிடிக்கலாம் என்ற ஆசையில் கொஞ்சம் பின்னோக்கி கம்ப ராமாயண காலம் நோக்கி நகரலாம்...அங்கு வடமொழியில் வால்மீகி கூட பேசாத இடம் ராமனும் - சீதையும் கண் கலந்து இதயம் நுழைந்த இடமான கன்னி மாடப்பகுதி .இந்த இடத்தில் ராமனின் பார்வையில் நுழைந்த கம்பன் சற்றே ஆர்வ மிகுதியில் ..

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,
கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு
அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்

”தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.”
என்று வருணித்து சீதா தேவியின் அழகைப் பற்றி பேசுகிறார் ஆனால் அதை முடிக்கும் முன் கம்பனுக்கு ஒரு விசயம் குறுக்கிடுகிறது.தான் ராமனின் பார்வையால் பார்த்தாலும் இவள் ராமனுக்கு மனைவியாகப் போகிறவள். அடுத்தவன் மனைவி என்ற எண்ணம் சட்டெனெ தோன்றியதோ என்னவோ அங்கு சட்டெனெ,

‘சதகோடி முன் சேவிக்க, மின் அரசு எனும்படி நின்றாள்’

நூறு கோடி மின்னல்கள் சுற்றிலும் வந்து நின்று வணங்கி நிற்க, நடுவில் அவர்களுக்கெல்லாம் தலைவி என்று ‘மின்னல் அரசி’யாம் சீதை! கம்பர் சுதாரித்து பேசுகிறார் கம்பர்.சரி அதை விடுவோம் .ராமனின் சீதைக்கே இத்தனை வருணனை தேவைப்படுகிறதென்றால் அழகை ரசிக்க எவ்வளவு மூடு தேவைப்படுகிறது ?

அர்த்தயாம பூஜை.

சிவன் கோவில்களில் இரவு சுமார் 8.30க்கு மேல் ( கோவில்களுக்கு தகுந்தாற் போல) சிவ ஆகமம் – பூஜா முறைகளில் இரவு அர்த்தயாம பூஜையும் ஒன்று ( மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து சிவிகையில் ஏற்றி, சகல உபசாரங்களுடன் பள்ளி அறையில் சேர்த்தல் என்பதாக நடத்தப்படுகிறது . ) அப்போது இறைவன் மிகவும் மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் கேட்கும் வரம் தருவார் என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கிறது .அது போல வாஸ்து பகவானுக்கு உகந்த நேரமாக அவர் எழுந்து ,குளித்து ,உண்டு ,நல்ல திருப்தியான மன நிலையாக தாம்பூலம் தரித்த நேரம் என்பது வாஸ்து பூஜைக்குறிய நேரமாகவே கருதப்படுகிறது .இப்படி இறைவனுக்கே வரம் தர நேரம் ( மூடு ) சொல்லப்படும் போது நாம் என்ன விதி விலக்கா ?

ஆனால் இதில் விதி விலக்கு இருக்கிறது ! இயற்கைப் படைப்புகளில் எங்காவது லயித்து மனம் நிற்கும் போது மட்டும் தன்னையறியாமல் பகுத்து பார்க்கும் குணம் சற்று பின்னோக்கி நகர்ந்து விடுகிறது ! கடல், மலை,நதி குளம் ,வானம் , மரங்கள் , பூக்கள் , பறவைகள்,மழைக்காட்சி,வானவில் எல்லாமே அழகாய்த் தெரிகிறது .இங்கு சற்று மின்னல் கீற்றாய் ஒரு விடை அழகைப்பற்றி கிடைக்கிறது . ஆம்.மனம் இயற்கையின் தாளவிதிக்குள் கட்டுப்படும்போது அது எண்ணங்களை கிளறாமல் நேரடியாய் மனதின் அடித்தளத்துக்குள் நீயே அதுவாகிறாய் "தத் துவம் அசி “ என்று கலந்து கரைந்து போகிறது .

மனிதன் எங்கிருந்து தோன்றினானோ அங்கே போய் கலந்து நிற்கவே உயிரும் மனமும் ஒன்றாய் போட்டியிடுகிறது .தேவையைப் பொறுத்தும், அடைந்து அனுபவிக்கக் கூடிய அழகெல்லாம் சலித்து மனம் ஒதுக்கிறது .எது நிரந்தரமோ அங்கே மனம் நிபந்தனைகளை கை கழுவிக்கொண்டு லயித்துப்போக தாவி நிற்கிறது ... !

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி (19-May-16, 6:59 pm)
சேர்த்தது : krishnamoorthys
பார்வை : 473

மேலே