என்விலை நூற்றி இருபது
என்விலை நூற்றி இருபது
____________________________________
தக்காளி
____________________________________
கோடைவாடையை
சிறுகச் சிறுக உறிஞ்சி
உடலெங்கும் நிரப்பிச் சிரிக்கும்
சிவப்பு வண்ணம் குழப்பிய
குண்டு அனுமானம் கொண்ட
என்னைப் பிழிந்து வைக்கும்
ரசத்தில் கலந்திருக்கும்
உங்கள் நாவின் ரசனாவாதம்
கூடியிருக்குமா !
கடைக்காரி கூவி விற்கக்கூட
கேட்பார் இல்லாமல் வெறிச்சோடி
வியாப்பித்திருக்கும் பொழுதுகளில்
கசங்கிப் போகிறேன்...
குழம்பில் மிதக்கும் என்னை
இலையோரத்தில் தள்ளி வைப்பாருண்டு
அதிகம் சேர்த்தால்
கல் வரும் என்று
ஒத்தி வைப்பாருண்டு...
அரசியல் வாதிகளை
அலங்காரப்படுத்த
அள்ளி வீசப்பட்டதுண்டு...
சினிமாவில் உச்சரிக்கும்
அல்ப வார்த்தைகளில்
அநாகரிகமாக என்னையும்
அம்மாவைக் குறிக்கும்
அந்த வார்த்தையின்
இடுகுறியாக்கி விட்டனர்
தேகத்தை விற்கும் தேவபாஷைகாரிகள்
கூட கொஞ்சம் கவனமாக உச்சரியுங்கள்...
என் விலை நூற்றி இருபது
_______________________________________
-திரு