அழகி

பூ வைத்தது இல்லை
பூ கோலம் இட்டு ரசித்தது இல்லை
கொலுசு அணிந்தது இல்லை
கொஞ்சும் குரலில் பாடியதில்லை
கூந்தல் நீளம் இல்லை
கூவும் சேவல் முன் விழித்தது இல்லை
செழிப்பாய் நகை அணிந்தது இல்லை
சேலை அடிக்கடி உடுத்தியது இல்லை
கை சிவக்க மருதாணி இட்டதும் இல்லை
கைகளில் வளையல் குலுங்கியது இல்லை
எவர் போன்றும் இல்லை
எழில் கொஞ்சும் என் நவீன தமிழச்சி

நெற்றியில் சின்ன திலகம் இட்டு
சின்னதாய் புருவம் மேலோங்கி
அவள் பார்க்கும் பார்வையில்
அத்தனை அழகும்
ஒரே நேர் கோட்டில் தாக்குகிறது

அவள் கலைந்த கூந்தலை
பஞ்சு விரல்கள் சரிசெய்யும் தோரணை
ரோஜா பூவிலிருந்து பனித்துளியை
காற்று தள்ளி விடுவது போல்
தோன்ற வைக்கிறது

உயர்ந்த காலணியில்
அவள் ஊன்றி நடந்தால்
அன்னநடையும் அன்னார்ந்து பார்க்கும்
அழகு உடையவள்

சில நொடிகள் அவள் சிரித்தாலே
சீன பெருஞ்சுவர் தூரம் வரை
ஓசை எழுப்பும்
புன்னகை கொண்டவள்

முகம் சுழிக்கும் அவள் பாவனையை
முழுமையாய் கண்டால்
விரதம் இருந்த விழிகளும்
காதல் கொள்ளும்

வறண்டு போகும் அவள் இதழ்களை
சின்னதாய் எட்டிப்பார்க்கும் நாவினால்
ஈரம் செய்வதை கண்டால்
குழந்தையே கொஞ்சும் அளவிற்கு
ஆசை துள்ளும்

மழையில் அவள் நனைந்தால்
மலரின் மௌனத்தை உடைக்கும்

மார்கழியில் அவள் விழித்தாள்
பனித்துளிக்கும் பித்து பிடிக்கும்

அவள் இதழ்கள் செந்தமிழ் பேசினால்
காகிதங்கள் கவிதையில் நிறையும்

அவள் கண்ணிரண்டும் பார்வை வீசினால்
கல்லும் பனிகட்டிப்போல் கரையும்

அவள் பனிக்கூழ் பருகிட கண்டால்
பறவைகளும் பறந்திட மறுக்கும்

அவள் நவீன உடையில் நலினம் செய்தால்
நயாகரா அருவியும் சற்று சிலிர்க்கும்

கதை எழுதும் அவள் விழியில்
கவிதை சொன்னேன் என் மொழியில் ...!

எழுதியவர் : முரளிதரன் (18-Jul-16, 12:07 pm)
Tanglish : azhagi
பார்வை : 961

மேலே