​இனிமையில்லா இறுதிக்காலம்

​எவருக்கும் உண்டு இறுதிக்காலம்
​கவலை கொள்ளும் கடைசிக்காலம் !
பிள்ளைகள் இருந்தும் ஆதரவின்றி
​வருந்தி வாழும் முதுமைக்காலம் !
சுமந்​த வயிறும் பற்றியெரியும்
​அமர்ந்து அழுவர் தனிமையில் !

வாழ்ந்தது​ அவர்களுக்கு வசந்தகாலம்
வாழ்வது இன்றோ தண்டனைக்காலம் !
பெருமைப்பட வளர்த்தப் ​பிள்ளைகளை
பாசமுடன்​ நினைத்திடுவர் பாவிகளை !
நன்றிகெட்ட மக்களை மறந்திடவே
உள்ளவரை​ முயன்றும் தோற்றிடுவர் !

விதியென​ நினைத்தே அழுதிடுவர்
வீதிகளில் அலைந்து திரிந்திடுவர் !
துணையின்றி வாழும் தாய்க்குலம்
துடித்திடும் நிலையோ பரிதாபம் !
அல்லலுறும் முதியோர் நிலைகண்டு
என்னிதயம்​ அழுகிறது ​எந்நேரமும் !

மதியிலா பிள்ளைகள் அதிகமாகுது
முதியோர் இல்லங்கள் நிரம்புகிறது !
அன்னையை மறந்தோர் அறிவிலார்
தன்னிலை மாறியும் தவித்திடுவார் !
பெற்றவ​ரைக் கைவிடும் பிள்ளைகள்
பெற்றிடுவர் இதேநிலை பின்னாலே !​

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (4-Nov-16, 8:15 am)
பார்வை : 199

மேலே