அன்பின் அரசாட்சியை அகிலமெங்கும் பரவச் செய்யாயோ
பசியென்றேன்.
உணவாய் புசியென்றாய்..
தனிமையில் நின்றேன்.
சுவாசமாய் என் துணையானாய்..
துரோகியென்ற பெயர் பெற்றேன்.
இந்தத் துரோகி கண்ட உண்மையாய் நீ சிரிக்கிறாய்...
யாவும் நீ...
எதிலும் நீ...
கடலடியில் நெருப்பை வைத்தாய்,
கடல் பொங்கி உலகம் அழியக் கூடாதென...
உயிர்களின் அடிவயிற்றில் நெருப்பானாய்,
உண்பதெல்லாம் ஜீரணிக்க...
நல்ல எண்ணங்களின் தொடக்கமும் நீ...
தீய எண்ணங்களின் முடிவும் நீ...
பகலில் வரும் சூரியனும் நீ...
இரவில் வரும் சந்திரனும் நீ...
உன்னையே எண்ணி,
ஆத்ம திருப்தியில் வாழ்கிறேன் நான்...
அருப்பெருஞ்சோதியே...
தனிப்பெரும் கருணையே...
உனை அறிவதிலேயே அஞ்ஞானம் நீக்கி,
விஞ்ஞானத்தோடு மெய்ஞானம் காண்கிறேன்....
நோயைப் படைத்த நீயே மருந்தாகவும் உள்ளாயே...
உனை அருமருந்தாய் உட்கொண்டு என் நோய்களனைத்தையும் நீக்குகிறேனே...
முகத்தால் முறைப்போரையும் புன்னகை கொண்டு மாற்றும் வித்தையினைத் தந்தவனே...
உலக இன்னல்களை போக்க, வல்லமை தாராயோ?....
எல்லைகளற்ற பிரபஞ்சத்தில் எங்கும் எதிலும் ஆற்றல்களாய் நிறைந்திருப்பவனே,
அநீதியை அழிக்கும் சக்தி தாராயோ???...
கனலென எழுந்த கோபத்தையும் கனநொடியில் மாற்றியவனே,
அதிகாரம் அழித்து அன்பின் அரசாட்சியை அகிலமெங்கும் பரவச் செய்யாயோ???...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
