மற்றுமொரு மகாபாரதம்
தமிழ் மண்ணில்
அரங்கேறிக் கொண்டிருக்கிறது
மற்றுமொரு மகாபாரதம் !
தர்மத்தை காக்க அல்ல ;
தன்னலத்துக்காக மட்டும் !
இங்கு பாண்டவர்கள்
யாருமில்லை !
கௌரவர்களுக்குள்ளே
கலகம் , பதவிக்காக
பல வேசங்கள் , நாலாந்தர
நாடகங்கள் !
இங்கு துகிலுரியப்பட்டது
தமிழ் மண்ணின் மானம் !
இது கண்ணனின்
கண்களிலிருந்து
மறைக்கப்பட்ட தேசம் !
கீதை உபதேசம்
எடுபடாது இங்கு !
சகுணிகளின் சாம்ராஜியமே
சாத்தியம் !
கர்ணன் என்று
யாருமில்லை
செஞ்சோற்றுக்
கடன் தீர்க்க !
கண்ணயர்ந்தால்
கருவறுக்கும்
கயவர்கள் கூடாரமே
கண்ணுக்கெட்டியவரை !
எத்தனை நாள் போராட்டமோ
தெரியாது , தர்மம் வெல்லுமா
மனம் அறியாது !
ஆனால் ஒன்று மட்டும்
நிச்சயம் ! ஒருவேளை
தர்மம் ஜெயித்தால்
அதற்குப்பின் வாழ
ஒரு உயிரும்
எஞ்சியிருக்காது
இது சத்தியம் ......!