தடி ஊன்றும் எழுதுகோல் தொடர் கவிதைகள் 12--முஹம்மத் ஸர்பான்
111.இரவோடு போராடி கற்ற உண்மைகள்
பகலின் வெளிச்சத்தில் மங்கலாய் தெரிகிறது
112.பாலைவனத்தில் நடப்பட்ட மரக் கன்றுகள்
சோலை பதிவேட்டில் கையொப்பம் இடுகிறது
113.மெழுகுவர்த்தியின் மெலிதான ஒளிக்கீற்றில்
மின்மினிப் பூச்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கின்றன
114.மழலைகள் தத்தெடுத்துச் செல்லும் வாசலில்
கைக்குழந்தை விண்ணப்பமாய் காமத்தின் முத்திரைகள்
115.கவிஞனின் கனவுகள் மார்கழி வெண்ணிலவாய்
அவனுக்குள் ஒளிர்ந்து எழுத்துக்குள் மறைந்து போகிறது
116.நொண்டிக் கால் குதிரை செய்யும் ஏழை
நொந்து போன மனதை பொம்மையோடு விளையாடி
தூங்காத வறுமையிடம் ஆனந்தமாய் பேசுகிறான்
117.பூக்கள் இல்லாத தேசத்தில் முளைத்த
காய்ச்சல் இல்லாத இலைகளும் மலடிகள் தான்
118.வெட்டியெறிந்த நகத்தை நினைத்துப் பார்க்கிறது
ஒட்டியிருந்த சதைத் துண்டின் முக்கோணக்காதல்
119.கண்கள் கண்ட நியாயத்தின் தீர்ப்பினை
நாக்கின் பொய்கள் யதார்த்தமாய் எழுதிக்கொள்கிறது
120.சுருங்கிய தோளோடு நாற்காலியாய் ஒட்டியிருக்கும்
உள்ளம், அசைபோடும் உணவுகள் பாதை மறந்தும்
நினைவுகள் தேடி அலைந்து திரியும் பயணங்கள்....,
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
