ஏற்றத் தாழ்வு
வாழ்வைத் தேடி வருந்தினாள் கண்ணீர்
மழையினில் நனைத்தாள் சோகத்தின் உச்சம்
தொட்டாள் இறையவன் படைப்பின் வேற்றுமை
எண்ணி வெந்தாள் விதியினை நொந்தாள்
அவலமே வாழ்வா? சோகமே தீர்வா?
அவசியம் உள்ளதை காணும் மார்க்கமும்
அறியாது நின்றாள் வறுமைப் பெண்ணாள்
வசந்தமே கண்டாள் செல்வப் பெண்ணாள்
வாழ்வின் சுகந்தம் யாவும் நுகர்ந்தாள்
வல்லவா இறைவா மனுவைப் படைத்தாய்
இருவழி பாதையில் பயணம் வைத்தாய்
மலையாய் மடுவாய் வேற்றுமை வைத்தாய்
வாழ்வினைப் பிரித்தாய் உயர்விலும் தாழ்விலும்
உடன்பாடு காணாத ஒவ்வாமை வைத்தாய்
கண்டு பிடிக்காத சூட்சுமம் வைத்தாய்
எல்லாம் செய்தாய் ஏதெனக் கரணம்
எவருமே அறியாத விந்தையும் புரிந்தாய்
உன்னைத் தொழுதே உன்னடி கேட்கிறேன்
கொடுத்தோர் நெஞ்சிலே ஈரம் வைப்பாய்
இல்லாதார் கவலையின் எண்ணம் வைப்பாய்
வாழ்வே போனதே தீதாய் ஆனதே
கானல் நீராய் மாறிப் போனதே
கலங்கும் மகளின் கண்ணீர் துடைப்பாய்
நல்லதோர் வாழ்வை அவளும்காணும்
நன்மையும் செய்வாய் வசந்தமே பெய்வாய்