என்றென்றும் அன்புடன்

அன்பே!
நீ உதிர்த்த புன்னகையின் சிதறல்கள்
இன்னும் இங்கு இறைந்திருக்கும் காரணத்தால்
பாலைவனம் கூட பூஞ்சோலையாய் தெரிகிறது.

உன் கனிவான கடைக்கண் பார்வையின்
குளுமை இன்னும் இங்கு நிறைந்திருப்பதனால்
கோடையும் இதமான வசந்தத்தை தருகிறது.

உன் மெல்லிய காலடி பட்ட இந்நிலத்தினில்
மென்மை படர்ந்திருக்கும் காரணத்தால்
இன்னும் முட்கள் வளரவில்லை.

வெள்ளி கொலுசணிந்த உன் பாதங்கள்
விட்டு சென்ற இனிதான ஓசை இசையாகி
எனக்கு தாலாட்டாகி போனது

உன் நாசியிலிருந்து வெளிப்பட்ட மூச்சு காற்று
தென்றலாய் வருடிய காரணத்தால்
உன் பிரிவு தந்த காயங்கள் புரையோடி போகவில்லை.

நெஞ்சினில் நீ குடிபுகுந்த காரணத்தால்
மென்மை ஆகி போன எந்தன் இதயம்
ஏனோ இன்று துடிக்கவும் மறுக்கிறது.
.
எத்தனை நாட்கள்தான் நினைவில் வாழ்வது
உணர்வு இழந்து என் உயிர் பிரியும் முன்
வந்து விடு என் அன்பே வந்து விடு.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (26-Apr-17, 1:33 am)
Tanglish : yendrendrum anbudan
பார்வை : 808

மேலே