பார்வை வேண்டும் பாவை
பூவையாய் நான் பூத்தென்ன லாபம்..!!
உன்னில் பூக்கும் வியர்வைக்கல்லவா
கிடைத்திருக்கிறது யோகம்..!!
வாகனத்தில் வலம் வருகிறாய்
வானில் பறக்க முயல்கிறதோ..!
உன்னை சுமக்கும் ஆனந்தத்தில்தான்
வாய்விட்டு சிரிக்கிறதோ??
உன் ஞாபகத்தில் உலவி வருகிறேனே
என்னையும் கொஞ்சம் கவனிக்கலாகாதா??
நீ நடந்து போகும் சாலையில்
சாளரங்கள் திறந்தே கிடக்கிறது
நீ கடந்து போகும் வேளையில்
சாமரங்களாய் மாறியே
சமரசம் அடைகின்றது..!!
உன் கற்றை முடிகளெல்லாம்
தென்றலோடு சாகசம் புரிவது
உன் பட்டு விரல்களை
தொட்டு விளையாடத்தானாம்..!!
விளையாட்டு மைதானம்
வினோத மைதானம் ஆகப்போகிறது
நின் மட்டைப்பந்தாட்டம் காண
மயில்கள் நாளை
மைதானத்தில் கூடுகின்றதாம்..!!
என் எதிரில் நீ நின்றுகொண்டிருக்க
நான் சுழன்று கொண்டிருக்கிறேன்..!!
கண்ணியமான உன் உரையாடல்கள்
என் காதுவரை எட்டி
காணாமல் போக
என்னை கடிந்துகொள்கிறாயே..!!
நான் உறைந்துபோனேனென்று
உரைக்கவும் வேண்டுமா?