சுமைகளும் சுகங்களும்

நன்றி..தினமணி வெளியீடு..15-05-17
==================================

சுமைகளும்..! சுகங்களும்..!
=========================

சுகங்களையே பெரிது மண்டும் மனிதர்கள்
சுமைகளை வெறுப்ப துண்மை இயல்பன்றோ..!

ஈரதன்பண்பைச் சீர்தூக்கி சிந்தையினுள் வைத்தால்
சீராகுமுன் பயணம்..! சிறக்குமுன் வாழ்வுநிலை..!

சூரியனும் வெண்ணிலவும் விண்ணிலே மாறிவருவதும்
சுகமும் சுமையும் வாழ்வில்வலம் வருவதுமியற்கை..!

இணையாகும் இவ்விரண்டும் இவ்வாழ்வில்..ஈதொரு
நாணயத்தின் இருபக்கமென நினைவில் வையப்பா..!

அன்னையவள் கருவைச் சுமப்பதைச் சுமையென
அதனைக் கருதினால் சுகமாக மகவைப் பெறமுடியுமா..?

தாயீன்ற தன்மகவைச் சுமந்தகாலம் சுமையேயாகும்
சேயீன்ற மகிழ்வின்பின் பலசுகங்கள் பிறக்குமப்பா..!

பதினான்கு ஆண்டுகள் இராமனேற்ற சுமைகள்பல..
பதிவிரதை சீதாதேவி சுகமாயதை இறக்கிவைத்தாள்..!

பிறகு தானேசுமையும் சுகமும்பல வடிவம்கொண்டு
இறகு முளைத்து இராமாயணமென்னும் காவியமானது..!

சுமைகண்டு வாழ்வில் துவண்டுவிடாதே எதையும்
சுகம்கொண்டு எதிர்கொள் என்றது பகவத்கீதை..!

சுமைகளும் சுகங்களும் நம்மிரண்டு கைகள்போலதைச்
சமமாகப் பார்க்கப்பழகி வெற்றியடைந்தான் பார்த்தன்..!

பாவிக்க வேண்டும் ஈரதையொன்றாக வென்பதை..மா
பாரதக்கதை பக்குவமாக உணர்த்தியதை நீஉணர்வாய்..!

குறையைச் சுமையாகவும் நிறையைச் சுகமாகவும்
அரைகுறை யாகவறிந்தவராரும் சாதனை புரிவதில்லை..!

காலிழந்த வாலிபனும் கையிழந்த நங்கையும்
பார்புகழும் பாராலிம்பிக்கில் பதக்கம்வெல்வ தெதனாலே.?

மிஞ்சியது எதுவுமில்லை எனயிடர்வரும் வேளையில்
எஞ்சியவர் வாழ்வை யொருகணம்நீ நினைத்துப்பார்..!

சுமையும்சுகமும் வாழ்க்கையெனும் நதியில் ஓடுமது
சுழித்தோடும் சூழலை யெதிர்த்து நீவாழப்பழகு..!

வாழ்க்கையுமொரு நற்பாடம் தானதைப் பக்குவமா
வாழ்ந்திடலாம் முறையான பயிற்சிமேற் கொண்டால்..!

நன்றி:: பட உதவி கூகிள்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (17-May-17, 6:15 pm)
பார்வை : 147

மேலே