காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1
ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் பார்க்கப்படவேண்டும். இவ்வாறன செய்திகள் குறித்த தனிநபர்களுக்கு எதிரான ஒரு வம்புச் (gossip) செய்தியாக குறுகிய காலத்தில் பரபல்யமாகி ஊடக செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றது. இதற்குக் காரணம், அச் செய்தியின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. ஏனெனில் நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட பிரக்ஞையற்ற காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. ஆனால் காலோட்டத்தில் இப் பிரச்னைக்குறிய அம்சம் பெரும்பாலும் கதைக்கப்படுவதில்லை ஏனெனில் பல்வேறு வம்புச் செய்திகள் வந்து எம்மை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். அல்லது மீண்டும் இன்னுமொருவர் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சனை பெரிதுபடுத்தப்படும். சிறிது காலத்தில் மீண்டும் இச் செய்தியின் முக்கியத்துவம் குறைந்து போகின்றது. ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நமது சமூகத்தன் காமம் மற்றும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் சிந்தனைகளின் ஆதிக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளும், அதன் மீதான அடக்குமுறைகளும் கேள்விக்குட்படுத்தப்படுவதோ அல்லது ஆராயப்படுவதோ இல்லை. மாறாக இந்த செய்திகள் ஆணாதிக்க சமூகத்தின் பார்வையின் அடிப்படையில் அமைந்ததாகவே பெரும்பாலும் எம்மை வந்தடைகின்றன. அது பற்றிய விமர்சன பார்வையின்றி நாமும் அதை அப்படியே உள்வாங்குவது நமது துரதிர்ஸ்டமே. இதுபோன்று குறிப்பாக அரசியலில் ஆயுதப் போராட்டங்கள் ஏன் உருவாகின என்பது மற்க்கப்பட்டு ஆயுதப் போராட்டம் என்பதே முக்கியபிரச்சனையாகவும் பயங்கரவாத பிரச்சனையாகவும் சித்தரிக்கப்படும் அதேவேளை ஆயுதப் போராட்டத்தற்கு காரணமாக இருந்த சமூக பிரச்சனை மறைக்கப்பட்டு அல்லது மீண்டும் அடக்கப்பட்டு விடுகின்றது. அதேபோல்தான் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கின்றன. ஏனெனில் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. அதேவேளை தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் உரிமை சுதந்திரம் என்பனவும் பின்னிப்பினைந்த ஒரு பிரச்சனை. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. எப்படி பிரபாகரன் மற்றும் அவரைப் போன்றவர்களை பயங்கரவாதிகளாக மட்டும் காண்பிப்பதன் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக அல்லது தேசிய பிரச்சனையை அடக்கிவிடுவதன் மூலம் அவ்வாறன ஒரு சமூகப் பிரச்சனை இல்லை என்றாகிவிடுகின்றது. இதே நிலைமைதான காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைக்கும் ஏற்படுகின்றது. ஏனெனில் சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாக பார்த்து தண்டனை அளிக்கின்றது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகின்றது. இப்படிதான் சமூகத்தின பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும். ஆகவே காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளையும் துஸ்பிரயோகங்களையும் ஒரு சமூகப் பிரச்சனையாகவும் அதனால் உருவாக்கப்பட்ட தனிநபர் பிரச்சனையாகவும் அணுகும் பொழுது அதற்கான காரணங்களையும் நியாயமான தீர்வுகளையும் கண்டறியலாம். அதன் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. இது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கான ஒரு ஆரம்பமே.
இந்தியாவிற்கான எனது முதல் பயணத்தில் முக்கியமான சென்ற ஒரு இடம் கஜீரோ என்றழைக்கப்படும் இடத்திலிருக்கும் கோவில்கள் ஆகும். இது இந்தியாவின் வட கிழக்குப்பகுதியில் தாஜ்மாகால் இருக்கும் பிரதேசத்திற்கு கீழே இருக்கின்றது. ஜான்ஸி ராணியின் நினைவாக இருக்கும் ஜான்ஸி புகையிரத நிலையத்திலிருந்து பஸ்ஸில் பயணிக்கவேண்டும். இந்தக் கோவில்களில் உள்ள விசேசம் முக்கியத்துவம் என்னவென்றால் இதன் கர்ப்பகிரகத்திற்குள் அதாவது மூலஸ்தானத்தில் கடவுள் இல்லை. வெறுமையான ஒரு இடம் மட்டுமே இருக்கின்றது. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிறுதுவாரத்தின் மூலம் வெளிச்சம் வருகின்றது. இக் கோயில்களின் கோபுரங்களின் வெளிப்புரமாக பிற இந்து சைவ கோயில்களில் இருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதிலாக நிர்வாண சிலைகளுகம் மற்றும் பாலியல் அல்லது காமத்தின் இன்பத்தை அனுபவிக்கும் உறவுகளின் பல்வேறுவிதமான முறைகளையும் அழகான சிலைகளாக வடிவமைத்திருக்கின்றனர். இதன் நேரிடையான அர்த்தம் என்னவெனில் காமத்தை அனுபவிக்காது அறியாது அல்லது பூர்த்தி செய்யாது மனிதர்கள் முக்தி அதாவது ஒருநிலை அல்லது முழுமையான பிரக்ஞை நிலை அல்லது சமயங்களின் பார்வையில் கடவுள் நிலையை அடைய முடியாது என்பதே. இப்படி பல காரணணங்களை கூறலாம். அடிப்படையில் மனிதர்கள் தமது காம அல்லது பாலியல் தேவையை பூர்த்திசெய்தபின்பே உயர் நிலையை அடையலாம். இதற்கு புத்தர் போன்று பலர் உதாரணங்களாக இருக்கின்றனர். குறிப்பாக பிற மதக் கடவுகளின் வாழ்க்கை வரலாறுகளின் இருந்து இவ்வாறன பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டுவிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு கஜீரோவில் 1000 கோவில்கள் இருந்தன என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் அரேபிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் இந்த கோயில்கள் அழிக்கப்பட்டு இன்று 10 கோவில்கள் மட்டுமே மிகுதியாக உள்ளன. இது மட்டுமின்றி இந்திய வரலாறு நமக்கு ஆணின் பார்வையில் அமைந்த காமசூத்திராவையும் பெண்ணின் பார்வையில் அமைந்த தந்திராவையும் நமக்கு தந்திருக்கின்றன. சீனாவிலும் இதற்கு நிகரான காம சாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் காமம் சக்தியின் பயன் மற்றும் அதை எவ்வாறு அணுகுவது மற்று பல்வேறுவிதமான உறவு முறைகள் நிலைகள் தொடர்பாக விளக்குகின்றன. இவ்வாறான வரலாறு கொண்ட இந்திய பிரதேசத்தில்தான் இன்று காமம் மற்றும் பாலியல் உறவுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பிற நாடுகளைவிட கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளில் குறிப்பாக பெண்களுக்கு எதிரான போக்கு மிக அதிகமாகவும் நுண்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
பிரம்சச்சாரியம்
ஒரு புறம் பெண்களை அடக்கி ஒடுக்கும் சமூகம் மறுபுறத்தில் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்களையும் அவர்களது காமத்தையும் கட்டிப்போடுகின்றது. பிரம்மச்சாரியம் என்பது அதியுயர் மனித நிலையாக பொதுவாக அணைத்து மதங்களாலும் போற்றப்பட்டுவருகின்றது. இதனால் பல பெற்றோர் குழந்தைகளை குறிப்பாக ஆண் குழந்தைகளை சிறுவயதிலையே சமய நிறுவனங்களில் அல்லது மடங்களில் சேர்த்து அவர்களை துறவிகளாக்கிவிடுகின்றனர். இவ்வாறு செய்வது குழந்தை போராளிகள் போன்று சிறுவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகப் பார்க்கப்படுவதில்லை. காரணம் சமய நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமல்ல மாறாக அதை சரியானதாகவும் நல்லதாகவும் பார்க்கும் சமூகக் கண்ணோட்டமுமே காரணமாகும். குழந்தைப் போராளிகளுக்கு எதிரான சட்டங்கள் போல் இதற்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். தனது ஆன்மீகப் பாதையை ஒருவர் தானே தெரிவு செய்வதற்கான உரிமையையும் அதற்கான வயதெல்லையை ஆகக்குறைந்நதது 14 வயதுவரை வைத்திருக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை தனக்கு விரும்பியதை தெரிவு செய்யும் மனவளர்ச்சியையும் பக்குவத்தன்மையும் பெறும் வரை சமூகமும் பெற்றோரும் பொறுத்திருப்பது நல்லது. ஏனெனில் குழந்தைப்பருவத்திலிருந்தே பிரம்மச்சாரியம் நோக்கி மத வழியில் வளர்க்கப்பட்டு வாலிப வயதில் தமது காம உணர்வினால் உந்தப்பட்டு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாது அவதிப்படுகின்ற பலரைக் நமது சமூகங்களில் சாதாரணமாக காணலாம். இவ்வாறானவர்கள் வாய்ப்புகள் கிடைத்தால் துறவற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சதாரண வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றனர். முடியாதவர்கள் களவாக மறைவாக பாலியலுறவுகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார துஸ்பிரயோகங்களின் மூலம் தமது காம மற்றும் பாலியலுறவின் தேவைகளை பூர்த்திசெய்கின்றனர். இதற்கான உதாரணங்கள் அணைத்து மத நிறுவனங்களிலும் நடைபெறுவதை காலம் காலமாக காணலாம். இது ஒரு புறம் சமய அறிவும் சடங்குகளும் தவறானது மற்றும் நடைமுறை வாழ்வுக்கு பொருத்தாதது என்பதையே இவை சுட்டி நிற்கின்றன. மறுபுறம் வரலாறு தோறும் இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. ஆனால் அதற்கான தீர்வை யாரும் காண்பதாக இல்லை. மாறாக பொது மனிதர்கள் இந்த மத போதகர்கள் பிரச்சாரர்கள் மீது ஆத்திரம் அடைகின்றனர். ஏனெனில் “படிப்பது தேவராம் இடிப்பது சிவன் கோவில்” என்பது போல இந்த மத போதகர்களும் பிரச்சாரகர்களும் போதிப்பது பிரம்மச்சாரியம் ஆனால் (களவாக) ஈடுபடுவது காம மற்றும் பாலியல் உறவில் என அறியும் பொழுது பொது மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு நம்பிக்கை துரோகமே. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இரு வழிகள் உள்ளன. ஓன்று பிரம்மச்சாரியம் என்பது மனித வாழ்வில் மற்றும் சமூகத்தின் உயர்நிலை அந்தஸ்து என்பது முதலில் அகற்றப்படவேண்டும். அது தொடர்பான சிந்தனை மாற்றப்படவேண்டும். மாறாக பிரம்மச்சாரியம் மனிதர்களுக்கு இயல்பாக வரவேண்டிய நேரத்தில் வரும் என்ற புரிதலும் அது ஒரு சமூக மற்றும் ஆன்மீக அந்தஸ்து அல்ல என்ற புரிதலும் ஏற்பட வேண்டும். இயற்கைக்கு மாறாக உடலின் தேவைகள் மறுக்கப்பட்டு கட்டாயப்படுத்தி திணிக்கப்படக் கூடாது. செய்யவேண்டியது என்னவெனில் காம உணர்விற்கு மதிப்பளித்து உடலின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் பொழுது பிரம்மச்சாரியம் இயற்கையாக சிலவேளை நடைபெறலாம். அதாவது ஒரு மரத்திலிருக்கும் பழுத்த பழம் தானாக கீழே விழுவது போல் காமமும் தனது முதிர்வில் மனித மனித்திலிருந்து உடலிலிருந்து விலகிவிடலாம். ஆல்லது அவ்வாறு நடைபெறாதும் விடலாம். ஆப்படி நடைபெறாது விடுவதனால் எந்த மனிதரும் மனித நிலையில் இருந்து ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. ஏனனில் காமம் இயற்கையான ஒரு சக்தி. மனிதரில் காமம் இருப்பதில் தவறேதும் இல்லையே. இரண்டாவது வழி குழந்தைகளை சிறு வயதிலையே மத வழிப்பாட்டு சடங்குகளில் பின்பற்ற நீர்ப்பந்திப்பதும் துறவற வாழ்க்கைக்கு அவர்களை அனுப்பிவிடுவதும் நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக இது சிறுவர் மீதான மனித உரிமை மீறல்களாக கணிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மத குருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறைவதற்கான சாத்தியங்கள் ஏற்படுவது மட்டுமல்ல அவர்களும் தமது உடல் மற்றும் மன தேவைகளின் அடிப்படையில் நியாயமான பாலியல் உறவுகளில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடுவதும் தவறாக பார்க்கப்படுவது தவிர்க்கப்படும்.
காமம் பாலியல் உறவு ஒரு பிரச்சனை
காமம் அழகானது. ஆந்த உணர்வு அற்புதமானது. இதமானது. இன்பமானது. இந்த அனுபவமானது காமத்தையும் அதனால் உருவாகும் பாலியல் உறவையும் உண்மையாகவும் ஆத்மார்த்மாகவும் பிரக்ஞையாகவும் செயற்படுத்தும் போது மட்டுமே சாத்தியமானது. காமம் ஒன்றும் அசிங்கமானதல்ல. மறைக்கப்படவேண்டிய ஒரு உணர்வும் அல்ல. குற்ற உணர்வால் கூனிக்குறுகி நிற்கப்படவேண்டிய ஒரு செயற்பாடும் அல்ல. ஆனால் அனைத்து அல்லது பெரும்பாலான மனிதர்கள் தமது அல்லது பிறரது காம உணர்வை குற்றவுணர்வுடன் தயக்கத்துடன் கூனிக் குறுகியே பார்க்கின்றனர், அனுபவிகக்கின்றனர். அவ்வாறு ஏன் செய்கின்றனர் என்பதற்கான பதிலைக் கண்டறிவதன் மூலம் காமம் மற்றும் பாலியல் உறவுகளை சுற்றியிருக்கும் மர்மங்களும் பிரச்சனைகளும் நீர்த்துப்போவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலமே மனிதர்கள் காமம் மற்றும் பாலியல் உறவு தொடர்பான ஒரு ஆரோக்கியமான பார்வையை கொள்வதுடன் அதை முழுமையாக குற்றவுணர்வின்றி அனுபவித்து நிறைவேற்றலாம். அல்லது வழமையைப்போல் இயந்திரத்தனமாக பார்த்தும் செய்தும் தமக்கும் பிறருக்கும் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம் . தெரிவு எங்கள் முன் இருக்கின்றது. தெரிவு செய்வதா இல்லையா என்பதும் ஒவ்வொரு மனிதரதும் உரிமை. ஆனால் நமது தெரிவுகளுக்கு அமைய அதற்கான விளைவுகளும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வது நன்று. ஆனால் காமம் மற்றும் பாலியல் உறவு தொடர்பான ஆரோக்கியமான தெரிவை மனிதர்களால் செய்யமுடியாது இருப்பதற்கு காரணம் என்ன?
காம உணர்விற்கும் பாலியல் உறவுகளுக்கும் எதிரான சமூக அடக்குமுறை தான் இதற்க்குக் காரணம் என்றால் மிகையல்ல. இந்த அடக்குமுறைக்கு நீண்ட கால வரலாறும் உள்ளது. இந்த வரலாறு நிச்சயாமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்று. இதன் மூலம் பல தனிமனிதர்களின் உளவியல் பிரச்சனைகளை கண்டறிவது மட்டுமல்ல அதற்கான தீர்வுகளையும் கண்டறியலாம். இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான நலமான சமூகத்தை கட்டி எழுப்பலாம். ஆனால் ஆணாதிக்கம் (patriarchy) சமூகம் ஒருதார மணத்தையும் (monogamous) இருபால் ஒரு மண உறவையுமே (heteronormative) சரியானது என கட்டமைத்து அமுல்படுத்தி வருகின்றது. இதற்கு அப்பாற்பட்ட எந்த உறவுகளையும் அங்கிகரிப்பதோ மதிப்பதோ இல்லை. மாறாக ஒரு தார ஒரு வழி இருபால் ஒரு மண உறவுக்கு அப்பாற்பட்ட அணைத்தையும் அடக்கி ஒடுக்குகின்றது.. இது குறிப்பாக பல வழிகளில் ஆண்களுக்கு சாதாகமாகவும் நன்மையளிப்பதாக இருந்தாலும் காம உணர்வின் இன்பத்தையும் பாலியல் உறவையும் உண்மையாகவும் அதன் ஆழத்திற்கும் அனுபவிப்பதையும் பொறுத்தவரை அனைவருக்கும் பாதகமானதே. மேலும் பிற அல்லது ஓரின பால் உறவுகளை (homosexual) மேற்கொள்பவர்களும் மற்றும் பிற பால் அடையாளங்களைக் (trans) கொண்ட அரவாணிகள் போன்ற மனிதர்களுமே இதனால் பாதிப்படைபவர்கள். குறிப்பாக உலகத்தின் சரிபாதி மனித வர்க்கமான பெண்கள் இதனால் பல வழிகளில் இன்றுவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கு ஆணாதிக்க இருபால் உறவு கொண்ட ஒருதார மண வழி சமூகம் (heteronormative patriarchal society) தனது பல்வேறுவகையான சமூக நிறுவனங்கள் மற்றும் வழிகளின் மூலமாக நடைமுறைப்படுத்துகின்றது. இந்த அடக்குமுறையையும் அது தொடர்பான கருத்தியல் கட்டமைப்பையும் மனிதர்களின் குழந்தை பருவத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. குழந்தைகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதன் மூலம் செயற்படுத்துகின்றது. மேலும் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான அறிவுத் தேடல்கைளை அழித்து அல்லது ஒழித்து பொய்யான அல்லது தவறான அறிவை கட்டமைத்து பரப்புரை செய்வதன் மூலமும் நிலைநாட்டுகின்றது. இவற்றுக்கு எல்லாம் மேலாக பெண்களை அடக்குவது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான மாயையை கட்டமைப்பதன் மூலம் அவர்களை ஆண்கள் மட்டும் பயன்படுத்த கூடியவாறு பாலியல் பொருட் பண்டங்களைப்போல (sexual objects) உருவாக்கி உள்ளது. அதேவேளை மறுமுனையில் பிரம்மச்சாரியம் என்பதை சமூகத்தில் உயர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் காமம் தொடர்பான உண்மைக்குப் புறம்பான யாதார்த்தமில்லாத சடங்குகளை மேற்கொண்டு மனிதர்களை கட்டுப்படுத்துகின்றது. இப்படி பலவற்றை இந்த ஆணாதிக்க சமூகம் தன் சமூக சாதிய சமய கட்டமைப்பைக் காப்பதற்காக செய்கின்றனது. இந்த அடக்குமுறைகளும் கருத்தாதிக்கமும் காலம் காலமாக கேள்வியின்றி பின்பற்றப்பட்டு வருவதால் நமக்குள் ஆழமாக பதிந்துள்ளன. காமம் பாலியல் உறவுகள் தொடர்பான ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகள் தவறானது என்ற சிந்தனைக்கே இடம் இல்லாதவாறு நமது எலும்பு மச்சைகள் வரை இந்த கருத்துக்கள் சென்றுள்ளன. ஆகவே நாமும் எந்தவிதமான கேள்வியின்றி பின்தொடர்கின்றோம் மந்தைக் கூட்டங்களாக….
மீராபராதி
தொடரும்