புகையிலை எனும் பகை

புகையிலை எனும் பகை ...!
புகையும் பகையும் பதுங்(கு)குழி விலங்கினம்போல்
வகையறியா வாழ்விலே சீர்கேடு
புன்னகை இதழ்களிலே புதைந்திடும் பூக்காடாய்
செந்நிறப் பிழம்பாலே சாக்காடு!
நஞ்சென அறிந்தும் நெஞ்சம் ருசிக்குமோ
வஞ்சகமாய் வாழ்வுதனைப் பறிக்குமோ
கொஞ்சம் வாழ்ந்துவிடு மனிதனாய்ப் பிறந்ததாலே
புகையிலை என்னமகரந்தமா? மறுத்துவிடு!
அச்சாணிக் கொம்பில்நின்று ஆகாயம் பார்ப்பதா?
அச்சம்; மடமை ஆராய்ந்துபார்
உள்ளங் கையில் ஓடுதுபார் வாழ்வுரேகை - உன்றன்
உதட்டில் அழிந்திடும் ஆயுள்ரேகை!
கொட்டு, மேளம், வேட்டுச் சத்தம்
பட்டுத் தெறிக்குமா உன்காதினிலே
கேட்டும் போகாதுஉயிர் விரும்பிய போதெல்லாம்;
வாட்டி வதைத்திடும் புகையிலையே!
இளம் பருவமே எதிர்நீச்சல் போடத்தான்
எதற்காக இந்த புகைமூட்டம்
உள்வாங்கும் புகையெல்லாம் உன்றன் பகையென்று
உணராத ஆறாம் அறிவுமட்டம் !
பீடி, சுருட்டு, சிகரெட்டு என்பதெல்லாம் - உன்னுள்
ஆடி அடங்காத பேயன்றோ
வாடி வகைக்கெட்டு வாழ்விழந்து போவதற்கும்
சூடிக் கொண்டசூழ்ச்சிப் புகையன்றோ!
புகைஊதிப் புழுத்துப் போனவன் கதியெல்லாம்
விழிபார்த்து செவிசாய்த்து நின்றோமே
நிலையாமை மயக்கத்தின் நீதி காத்திடவே
கல்லறை சமைப்போமே புகையிலைக்கு!
*************