கால விலாங்கு

ஆதியில் மனிதனை படைக்க
கனவு கண்ட கடவுள்,
படைத்த பின்
பீதியில் உறக்கம் தொலைத்து
பகல் கனவு காண்கிறார்
மனிதன் மாறிவிடுவான் என்றே.
கடவுளின் உறக்கத்துக்காக
கண்விழித்துக் காத்திருக்கும்
மனிதன் கட்டுப் பணத்தோடு
தவித்திருக்கிறான் எப்படியும்
அடுத்தக் கடவுளாய் ஆவதற்கு.
தூங்காத கடவுளுக்கும்
விழித்திருக்கும் மனிதனுக்கும்
காதில் பூ சுத்தியபடி திரியும்
காலம் மீனுக்குத் தலையும்
பாம்புக்கு வாலையும் காட்டும்
விலாங்கு மீனின் கவனத்தோடு நகரும்
என்றாவது இரண்டில்
ஒன்றுக்கு இரையாகும்
நிச்சயத்தோடு..
*மெய்யன் நடராஜ்