நிலவு என் காதலன்
நிலவு வரும் வேளை அவனும் வருவான்
வந்தவுடன் எனை அள்ளி அணைப்பான்
வாகாக எனைக் கட்டி இழுப்பான்
கட்டிலிலே தள்ளி முத்தம் பதிப்பான்
தள்ளிவிட்டு, நான் துள்ளி எழவே
எனைக் கிள்ளி, கள்வன் என் காது கடிப்பான்
நிலவு முகம் கொண்ட நீல்வண்ணன்
என் கனவு மட்டும் கண்ட கார்கண்ணன்
நிலவினிலே காதல் பாடும் காதலர்கள் இருக்க
நானோ நிலவோடு காதல் பாடும் கள்ளி
நிலம் விட்டு நீல்வானம் தொட்டு
நிலவோடு கைகோர்ப்பாள் இந்த நிலமடந்தை
அரைத்திங்கள் அன்பைக் கொட்டி
அடுத்த பாதி விட்டுப் போவான்
மீண்டும் வருவான் எட்டிப் பார்த்தேன்
ஏனோ தூரம் நீண்டு போனது
அவன் வரும் வரைக்கும் நீல்வானம் இருக்கும் நிலவு என் காதலன்..
#கரிசல்மகன்