சுதந்திரச் சேவல்
71 ஆம் ஆண்டில் கால் வைக்கிறோம்...#சுதந்திரக்_காலை இப்படி விடிகிறது.....
சுதந்திரச் சேவல் கூவுதடி - அது
சூரியன் வந்ததைப் பாடுதடி !
கதவு உடைந்தனவாம் கூவுதடி - நாம்
கனவடைந் தனமாம் பாடுதடி !
பாரதர் ஒற்றுமை பார்த்தவர்கள் - நிலை
பயந்துவிட் டாரெனக் கூவுதடி
தாரக வந்தே மாதரந்தான் - நம்
தரணியும் சொல்வதைப் பாடுதடி !
அறிவில் சுதந்திரம் நாமடைந்தோம் - என
ஆர்ப்பரித்தே தான் கூவுதடி !
நிறைந்திடும் ஞானமே செல்வமென்று - சொலும்
நிலைமை கண்டோமெனப் பாடுதடி !
அச்சம் அழிந்திட ஆனந்தமே - நம்
அகத்தில் நின்றிடக் கூவுதடி
உச்சம் அடைந்தனம் பாரதர்தான் - எனும்
உணர்ச்சியில் வானையும் மோதுதடி !
வெள்ளை விடியலைப் பார்த்துவிட்டோம் - நம்
வேதனைக் கட்டினைப் பேர்த்துவிட்டோம் !
பள்ளத் திருட்டினை நீங்கிவிட்டோம் - இனி
பார்ப்பம் விடுதலையென் றோதுதடி !!
-விவேக்பாரதி