அந்த இடைவெளி

அந்த இடைவெளி
===================================ருத்ரா

எத்தனை காலம் நூற்றுக்கொண்டிருக்கிறோம்!
இந்த இழையை.
நம் கைவிரல்கள் கோடி கோடி கணக்கில்
பின்னி பின்னி வருகின்றன.
எது பஞ்சு?
எது பருத்தி?
தெரியவில்லை.
நிகழ்வுகள் சுழல்கின்றன.
கடல் பாசியிலிருந்து
ஒற்றை செல் உயிர்த்துளி
ஊழிகள் அடர்ந்த உயிர்களின்
வனம் ஆயிற்று.
நீரிலிருந்து மண்ணுக்குத்தாவிய
உயிர்
பல வடிவங்கள்
உடுத்துக்கொண்டிருக்கின்றன.
கொம்புகள்.
கோரைப்பற்கள்.
கூர்நகங்கள்.
இறுதியாய்
மனிதன் கையில் வில் அம்பு ஈட்டி!
மனிதர்கள் தங்கள் தலைகளை
தாங்களே கொய்து கொள்கின்றனர்.
மகுடங்கள்
அலங்கரிக்கப்பட்ட கபாலங்களாய்
சரித்திரம் பேசுகின்றன.
வானம் வாக்குகளை உமிழ்கிறது.
பயத்தையும் மரண மழையையும்
தூவுகிறது.
அச்சத்தின் மெல்லிய சல்லாத்துணி
மண்ணின் அடி வரை
மூடிப்படர்கிறது.
மனிதன்
இன்னொரு மனிதனைப்பார்த்து தான்
கடவுளின் பிம்பம் அறிகிறான்.
அது எப்படி
ஒருவன் மீது இன்னொருவன் ஏற்றும்
சிலுவை ஆனது?
ஒருவன் துப்பாக்கி
இன்னொருவன் இதயத்தின்
துடிப்புசதைகளையும்
குருதி ஓட்டத்தையும்
ஏன் சிதைக்கத்துடிக்கிறது?
இந்த கேள்வியின்
ரத்தக்கசிவுகள் இன்னும்
நம் பக்கங்களை
வர்ண அச்சில் வார்த்து வார்த்து
பதித்துக்கொண்டே இருக்கின்றன.
கம்பியூட்டருக்குள்
தெரியும் மூளைப்பிதுங்கல்களிலும்
செத்துப்போன ரத்த அணுக்களாய்
கிராஃபிக்ஸ் காட்டுகின்றன.
மனிதம் மறைந்தே போய்விடுமா?
எங்கிருந்தாவது ஒரு ஏலியன்
மனிதப்பூவின்
அன்பு மின்சாரத்தை
புதிதாக நம்மிடையே
பாய்ச்சாமலா இருக்கப்போகிறது?
இன்னும்
நம் குவாண்டம் கம்பியூட்டிங்
காம்ப்ளெக்ஸ் "ஹில்பெர்ட் ஸ்பேசில்"
அதன் க்யூபிட்ஸ் ல்
நம்பிக்கையின் அந்த
இடைவெளி இருக்கிறது!

================================

எழுதியவர் : ருத்ரா (25-Sep-17, 7:08 pm)
Tanglish : antha idaiveli
பார்வை : 85

மேலே