முடிவறியா முடிவினை நோக்கி

​முடிவறியா முடிவினை நோக்கி
வளரும் தளிர்களின் பயணம் ..
இருண்டுத் தெரிகின்ற சூழலால்
நிர்ணயிக்க இயலா இலக்கின்று ...
இடைவெளி கூடிடும் நிலையால்
இணைய முடியா தலைமுறைகள் !

சீரழிந்தப் பாதையில் தெரியாது
பகுத்தறிவு பாதங்களின் தடங்கள் ..
செப்பனிட முயன்றோர் முயற்சியும்
செத்தப்பின் செத்தது கொடுமையது ..
வகுத்திடும் வாழ்வியல் தோற்காது
வாழ்ந்துக் காட்டியவர் பலருண்டு !

வாய்கிழிய பேசுகிறார் வையத்தில்
பொய்யென்று அறிந்த அறிவாளிகள் ...
பொம்மைகள் என்றே கருதுகின்றனர்
மைவைத்தபின் மக்களை மதிமான்கள் ...
பொய்யேப் பேசுகின்ற தொழிலவர்க்கு
பொற்கை பாண்டியனென நினைப்பவர்க்கு !

சிந்தனைகள் சீரானால் சீரழியாது
சிந்தையும் சிதலமாய் சிதறாது ..
வழிமுறை நல்முறை என்றானால்
செய்முறை எதிர்மறை ஆகாது ...
மூத்தோர் அறிவுரை வழிநடப்பின்
முடங்கிய மூளையும் சீராகும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (21-Oct-17, 2:57 pm)
பார்வை : 877

மேலே