சிநேகிதனே -அத்தியாயம் - 11

.....சிநேகிதனே....

அத்தியாயம் : 11

"என்ன அங்கேயே நின்னுட்ட...உள்ள வா மித்ரா..."

அவனது குரலில் மீண்டும் நடப்புக்கு வந்த நான் ஒவ்வொரு அடியையும் மெதுவாக வைத்தே உள்ளே சென்றேன்...

"ஹேய் இரு இரு..."என்று என் முன்னே வந்து என்னைத் தடுத்தவன்,என் கண்களிரண்டையும் பொத்திக் கொண்டான்...

"சரண் என்ன பண்ற...??.."

"அட பொறுங்க மேடம்,"என்றவாறே என்னை அவன் கைப்பிடியில் அழைத்துச் சென்றான்...

மெதுவாக என் இரு கண்களையும் அவனது கரத்திலிருந்து விடுவித்தவன்,

"இதான் என்னோட பொண்டாட்டி....இதுவரை நேரமும் நீ பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த இந்தச் சரணோட மனைவி...அவள் மட்டும் இல்லைன்னா நான் எதுவுமே இல்லை...அவதான் எனக்கு எல்லாமுமே..."

"ரொம்ப ரொம்ப அழகாயிருக்கா ல...அகத்திலும் சரி முகத்திலும் சரி அவ எப்பவுமே அவ்வளவு அழகு...என்னுடைய விழிகளுக்கு அவள் மட்டும்தான் இந்த உலகத்திலேயே பேரழகு..."

"அவள்கிட்ட எனக்குப் பிடிச்சதே அவளோட புன்னகைதான்...சிரிக்கும் போது ரொம்ப அழகாயிருப்பாள்...அவ சிரிக்கும் போது அவளோடு கண்களும் சேர்ந்து சிரிக்கும்...அதை வாழ்க்கை முழுதுக்கும் பார்த்திட்டே இருக்கலாம்னு தோனும்..."

"கொஞ்சம் கோபக்காரி...ஆனால் ரொம்பவே பிடிவாதக்காரி...எந்தளவுக்கு பிடிவாதம்னா,அவ ஒரு விசயத்தில முடிவு எடுத்திட்டாள்னா அதிலயிருந்து மாறவே மாட்டாள்..."

"அதனாலதான் என்னவோ என் விசயத்தில அவ எடுத்த முடிவைக் கூட அவளால மாத்திக்கவே முடியலை...நாலு வருசமா அவ அதிலேயேதான் உறுதியா இருந்திருக்கிறாள்...இப்போவரைக்கும் கூட அவ அதை மாத்திக்க விரும்பல...ஆனால் இந்த முறை அவளோட முடிவில அவ பிடிவாதமா இருக்கிகிறதுக்கான காரணமும் நான்தான்...நான் மட்டுமேதான்..."

"நான்னா அவளுக்கு அவ்வளவு பிடிக்கும்...என்னை வேணாம்னு அவ சொல்லிட்டுப் போனப்ப கூட அவளோட கண்களில நான் அளவுக்கதிமான காதலை மட்டுமேதான் பார்த்தேன்..."

"அந்தக் காதல்தான் அன்னைக்கு என்னை வாயடைக்க வைச்சுது...அந்தக் காதல்தான் அவ என்னை விரும்பியும் எதுக்காக வேணாம்னு சொன்னா என்கிறதுக்கான காரணத்தை தேட வைச்சுது...அந்தக் காதல்தான் அவளுக்காக மட்டுமே காத்திருக்கவும் சொல்லிச்சு..."

"அவ என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணத்தை தேடி நான் அலைஞ்சப்போ அதுக்கான பதில் தூரமா நின்னு கொஞ்ச காலத்துக்கு என்னை வேடிக்கை மட்டும்தான் பார்த்திச்சு...ஆனால் அந்த பதில் என்கிட்ட வந்தப்போ என்னோட உலகமே இருள்மயமாகும்னு நான் நினைக்கவேயில்லை.."

"என்னை விட்டு அவளை தூரமாக்கிய அவளோட நிலைமைக்காக நான் அழுகிறதா...??இல்லை என்னோட வாழ்க்கை நல்லாயிருக்கனும் என்றதுக்காக தன்னையே தனக்குள்ள புதைச்சுகிட்டு வலியோட போனவளை நினைச்சு வேதனைப்படுறதா...??இல்லை இதை என்கிட்ட கூடச் சொல்லாதளவுக்கு நான் அந்நியமாகிட்டனா? என்றதை நினைச்சு கண்ணீரில கரையுறதான்னு அன்னைக்கு எனக்குத் தெரியல..."

"ஆனால் அவளோட நிராகரிப்பு என்னைவிட அவளுக்கு எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும்னு என்னால அன்னைக்கு புரிஞ்சுக்க முடிஞ்சுது...இந்த முடிவை அவ எடுக்கிறதுக்கு எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாள் என்றதையும் என்னால உணர முடிஞ்சுது..."

"எனக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்...அவங்களோட உலகத்தில நானும் ஒருத்தனாய் இருக்கவே என்னைக்குமே ஆசைப்படுவேன்...அவங்களோட சின்னச்சின்ன அசைவுகளைக்கூட நான் அவ்வளவு ரசிப்பேன்...என்னுடைய குழந்தை எப்படி இருக்கும்னு எனக்குள்ள ஆயிரமாயிரம் கற்பனைகள்..."

"அதனாலதான் என்னவோ,அவள் என்கிட்ட கூட இந்த விசயத்தை இந்த நிமிசம் வரைக்கும் சொல்லாமலேயே மறைச்சிட்டாள்,அவளால தாய்மை அடைய முடியாது என்கிறதை என்கிட்ட சொன்னா எங்க என்னோட வாழ்க்கையில சந்தோசம் இல்லாமலே போயிடும் என்ற பயத்தை விட,எங்க அவளை விட்டு நான் போயிடுவேனோ என்கிற பயம்தான் அவளுக்கு அதிகமாக இருந்திருக்கனும்..."

"அதனாலதான் அவளே முந்திக்கிட்டா...ஆனால் அவளோட அந்த முடிவு எனக்கு எவ்வளவு கொடுமையானதுன்னு அவளுக்குத் தெரியல...அவள் என்னோட வாழ்க்கையை விட்டிட்டுப் போயிட்டா நான் இன்னொரு கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தைன்னு சந்தோசமா இருப்பன்னு அவ நினைச்சுட்டா..."

"ஆனால் அவளுக்குத் தெரியல....என்னோட மொத்த சந்தோசத்தையும் எடுத்துகிட்டுத்தான் அவ என்னை விட்டுப் போயிருக்கான்னு...என்னை முழுமையா நிரப்ப வேண்டியவளே என்னை வெற்றிடமா விட்டிட்டுப் போயிட்டாள்னு..."

"எனக்கொரு குழந்தையை அவளால பெற்றுத்தர முடியாதுன்னு விலகிப் போனவளுக்கு ஒரு உண்மை புரியாமலே போயிட்டுது...என்னோட முதல் குழந்தை என்னைக்கு அவதான்னு..."

"என்னுடைய குழந்தைகளோட உலகத்தில நான் மகிழ்ச்சியா இருக்கனும்னு ஆசைப்பட்டவளுக்கு...என்னுடைய உலகமே அவள்தான்னு அவளுக்குத் தெரியாமலேயே போயிடுச்சு..."

"இன்னைக்கு கூட அவளை நான் எவ்வளவோ காயப்படுத்தினேன்...வார்த்தைகளாலயே சாகடிச்சேன்....என்னை நானே கல்லாக்கிகிட்டு அவளோட இதயத்தையே குத்திக்கிளறினேன்..."

"ஆனால் அப்போதும் கூட அவளோட காதலை ஒத்துக்கிட்டாளே தவிர...என்னையும் என்னோட காதலையும் அவ ஏத்துக்கவேயில்லை...என்னை விட்டு விலகிப் போனதுக்கான காரணத்தை அவள் சொல்லவுமில்லை..."

"அவளோட காதல் மட்டுமே எனக்குப் போதும்...நான் அவளை அவளுக்காக மட்டுமேதான் காதலிச்சேன்...இப்போ கூட அவ என்னோட காதலை ஏத்துக்குவாளா??இல்லையான்னு தெரியல..."

"ஆனால் இன்னும் எத்தனை வருசமானாலும் என்னோட வாழ்க்கையில அவ மட்டும்தான்...என்னோட தோழியாய்,காதலியாய்,மனைவியாய் என்னை அவளால மட்டும்தான் முழுமைப்படுத்த முடியும்...எனக்குள்ள இருக்கிற இடைவெளியை அவளால மட்டும்தான் நிரப்ப முடியும்.."

"இதுக்குமேலயும் அவளை நான் கட்டாயப்படுத்தப் போறதில்லை....அவளுக்காக...இந்தச் சரணோட மித்ராவுக்காக என் காதலும் நானும் என்னைக்குமே காத்திருப்போம்..."


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (24-Oct-17, 3:22 am)
பார்வை : 551

மேலே