உழைப்பே உயர்வு
நீ
சிந்திடும் வியர்வையின் வழியே
சிந்து நதியொன்று
பிறந்திடுதே
உன் கரங்கள் இரண்டிலும் குருதியின் வாசம்
உழைப்பின் மகிமையை
உணர்த்திடுதே
உதயனைச் சார்ந்த
பூமியின் ஓட்டமும்
உன்னைச்சார்ந்தே நிகழ்கின்றதே
சிறிதொரு காலம்
உன் தயவினை இழந்தால்
உலகமே வீழ்ச்சி அடைகின்றதே
உழைக்கும் வர்க்கமே
தோல்வியில் எழும் வலிகளுக்கெல்லாம்
முயற்சியில் தளர்ச்சி கூடாதென
உன் மனத்திடத்தின் வழியே
நான் உணர்ந்து கொண்டேன்
வாழ்க்கையின் இலக்கணம்
போராட்டம் என்று
உன் உழைப்பின் வழியே
நான் அறிந்துகொண்டேன்
காகிதம் போல் ஓர் மனமிருந்தாலும்
ஆயுதம் ஆக்கிக்கொள்ளும்
வரத்தினை உன்னிடமே
நான் பெற்றுக்கொண்டேன்
சாகும் நிலையே எதிர்வந்தாலும்
எதிர்த்து போரிடும்
போர்க்குணம் உன்னிடமே
நான் கற்றுக்கொண்டேன்
தன் உடலை வருத்தி உயிரைத்
தாழ்த்தி
உழைப்பைக் கற்பிக்கும் ஆசானே
என் இதயத்தில் உனக்கென்று
இடமொன்று வைத்தேன்
இமயத்தின் உயரத்திலே...
அ.ஜீசஸ் பிரபாகரன்

