கட்டியவன் கைவிட்டால்
கொதிக்கும் உலையை
ஆற்றிட முடியும்
தகித்திடும் உள்ளத்தை
தேற்றிட இயலுமா !
கைப்பிடித்த கணவனும்
கைவிட்டுச் சென்றான்
இணைந்தே இருந்தவன்
இருந்தும் என்னபயன் !
கடுகளவு தவறையும்
மலையளவு நினைத்து
குற்றம் கூறுபவர்கள்
நக்கீரர் வழித்தோன்றலோ !
அணைத்தால் நெருப்பும்
அடங்கிடும் அடுப்பில்
அணைப்பவன் தீயானால்
அழிந்திடும் இல்லறமும் !
கட்டியவன் கைவிட்டால்
பட்டுவிடும் வாழ்க்கையும்
எட்டிநிற்பவன் கெட்டவனாகி
தொட்டிடவும் நினைப்பான் !
ஓடுகின்ற நதியில்
ஒற்றைப் படகன்றோ
வாழ்வெனும் களத்தில்
போராடும் இப்பெண்கள் !
பழனி குமார்