அம்மா

அம்மா

கடும் வெயில் நாக்கு வறட்சியாக இருந்த்து. எங்காவது தண்ணீர் கிடைக்குமா? என்று மனம் அலை பாய்ந்தது. பக்கத்து கடையில் சர்பத் கடை ஒன்று இருந்தது. ஆனால் கையில் பணம் இல்லை. சம்பளம் வர இன்னும் ஒரு வார காலம் ஆகும். சம்பளம் வந்தாலும் அப்படி என்ன வந்து விடப்போகிறது? இரண்டாயிரம் கொடுப்பார்கள். அம்மாவின் வைத்திய செலவுக்கு பாதிப்பணம் போய் விடும்.தங்கையும் வேலைக்கு போகிறாள். அவளுக்கு ஆயிரத்தைந்நூறு கொடுப்பார்கள். இதனால் குடும்பத்தை ஓரளவு ஓட்ட முடிகிறது. நல்ல வேளை அப்பா உயிரோடு இல்லை.அவர் இருந்தவரை தினமும் அம்மாவுக்கு அடி உதைதான் நாங்கள் இருவரும் பயந்து பதுங்கி கொள்வோம்..ஆனால் அப்பா இருந்த வரை அம்மா திடகாத்திரமாகத்தான் இருந்தாள். அம்மா தினமும் காலை பள்ளிக்கு ‘ஆயா’ வேலைக்கு செல்வாள். போகும் முன் இரண்டு குழந்தைகளுக்கு பாடம் எடுப்பாள். நாங்கள் இருவரும் பெண்களாக இருந்து விட்டதால் எங்கள் வேலைகளை நாங்களே பங்கிட்டு செய்து கொள்வோம். அப்பாவின் வேலைகளை அம்மாவே செய்வாள். எங்களை செய்ய சொல்வதில்லை.
அம்மா நல்ல செல்வமான குடும்பத்திலிருந்து வந்தவள்தான். அப்பாவையும் குறை சொல்ல முடியாது. அவரின் சொத்துக்களும் கணக்கில்லாமல் இருந்தன. பெரிய கடை வீதியில் நான்கைந்து கடைகள் கூட வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால் விதி அவரை சினிமா ரூபத்தில் இழுத்து சென்றது. ஒரு முறை சினிமா ஷூட்டிங் பார்க்க நண்பனுடன் சென்றவர் அந்த நண்பனுக்கு அறிமுகமானவர் என்று ஒரு கதாசிரியரை இவருக்கு அறிமுகப்படுத்த, அன்றிலிருந்து இவருடைய பாதையே மாறி விட்டது. தின்மும் மாலை எங்களுடன் விளையாண்டு பொழுதை கழித்த அப்பா புதிது புதிதாக நண்பர்களை வீட்டுக்கு கூட்டி வந்தார். மாடியில் போய் ரூமை அடைத்து கொள்வார்கள். அப்படி என்னதான் பேசிக்கொள்வார்களோ தெரியாது. இரவு பன்னிரெண்டு மணி வரை கூட ஆகும். அவர்கள் வெளி வர. சில நேரங்களில் இவருடைய நண்பர்களை இவரே கைத்தாங்கலாக வெளியே கூட்டி வந்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பிய கதையும் உண்டு. ஒரு நாள் நாங்கள் பள்ளி முடிந்து வீடு வந்த பொழுது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இருவரும் சளைக்காமல் வார்த்தைகளை வீசிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் புத்தக பை கட்டுகளை கீழே வைத்துவிட்டு பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தோம். அம்மா திடீரென்று என்ன நினைத்தார்களோ தெரியாது, அமைதியாக ஒரு அறைக்குள் சென்று விட்டார்கள். நாங்களும் பின்னாலேயே சென்றோம்.அம்மா எங்களை அணைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டார்கள். வெகு நேரம் வரை உட்கார்ந்திருந்தோம். பின் மெதுவாக எங்களை எழுப்பி சமையலறைக்குள் கூட்டிச் சென்று சாப்பிட வைத்தார்கள். நாங்கள் படுக்க சென்ற பொழுது நடு இரவு ஆகி விட்டது. காலையில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பி செல்லும் வரை அப்பாவை பார்க்க முடியவில்லை. அம்மா அப்பொழுதெல்லாம் வேலைக்கு செல்ல மாட்டார்கள். அதன் பின்னால் அப்பாவை மாதம் ஒரு முறைதான் வீட்டில் பார்க்க முடிந்தது. எங்களுக்கும் விவரம் புரியாத வயது. பின்னர்தான் தெரிந்த்து அவர் அத்தனை சொத்துக்களையும் விற்று சினிமா தயரிப்பில் இறங்கி விட்டார் என்று.
அதன் பின்னர் அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாய் மறைந்தன. ஆறு மாதங்கள் கடந்திருக்கும், ஒரு நாள் மாலையில் வீட்டிற்குள் நாங்கள் வரும் பொழுது கூட்டமாக இருந்தது. அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அம்மாவின் முகம் கவலையுடன் இருந்தது. நாங்கள் அம்மாவின் பின்னால் போய் நின்று கொண்டோம்.அப்பாவை சுற்றி இருந்தவர்கள் மெதுவாக அம்மாவிடம் வந்து ‘சரிம்மா நாங்கள் கிளம்புகிறோம்’ பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் சொல்லி விட்டு ஒவ்வொருவராக கிளம்பினார்கள். கடைசியாக மிஞ்சியது அப்பா, அம்மா, நாங்கள். ஒரு வாரம் அமைதியாக ஓடியது.
அப்பா இப்பொழுது நன்றாகி விட்டார். ஏன் நன்றாகியது என்று கேட்கும்படி இருந்தது அவரது நடவடிக்கைகள். இப்பொழுதெல்லாம் தினமும் போதையுடன் வீட்டுக்கு வருகிறார். அம்மாவுக்கு தினமும் அடி உதைதான். எங்கள் நிம்மதி போயிற்று. வறுமை ஆரம்பித்து விட்டது. தினமும் விதம் விதமாய் சாப்பாடு எடுத்து சென்று சாப்பிடும் எங்களை அம்மா பள்ளியிலேயே சத்துணவு சாப்பிட சொல்லிவிட்டார்கள். எங்களுக்கும் வீட்டின் வறுமை புரிந்ததால் பழகிக்கொண்டோம். ஒரு நாள் காலை பத்து மணி அளவில் யார் யாரோ வந்தார்கள் எங்கள் வீட்டை எங்களை கேட்காமலேயே சுற்றி பார்த்தார்கள். அம்மாவிடம் ஏதோ பேசினார்கள். எங்களுக்கு அன்று விடுமுறை ஆனதால் நாங்கள் வீட்டிலிருந்தோம். அம்மாவிடன் நிறைய பணம் கொடுத்தார்கள். எவ்வளவு என்று எங்களுக்கு தெரியவில்லை. பின் ஏதோ பேப்பரில் அப்பாவிடமும், அம்மாவிடமும் கையெழுத்து வாங்கி கொண்டார்கள். இருவரின் கண்களூம் கலங்கியிருப்பது தெரிந்தது. பின் அம்மாவிடம் சீக்கிரம் காலி செய்து விடுங்கள், என்று கூறி விட்டு சென்றார்கள். எங்களை விட்டு அம்மாவும் அப்பாவும் எங்கோ கிளம்பி சென்றார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, நன்கு இருட்டி விட்டது. அதுவரை நாங்கள் தனியாக இருந்தோம். காலை நாங்கள் விழித்தபோது வீடு சுத்தமாக இருந்தது போல் இருந்தது. பெட்டி படுக்கைகள், பாத்திரங்கள் ஆகியவை வீட்டின் முன்னால் வைக்கப்பட்டிருந்தன. அம்மா சீக்கிரம் குளித்து ரெடியாகுங்கள்” விரட்டினாள். நாங்கள் குளித்து ரெடியாகி வரும்போது நல்ல பசி, நல்ல வேளை அம்மா பார்சலில் இட்லி வாங்கி வைத்திருந்தாள். அவசர அவசரமாக சாப்பிட்டோம். சாப்பிட்டு முடிக்கவும் வாசலில் வேன் ஒன்று வந்து நிற்கவும் சரியாக இருந்தது. பட படவென சாமான்கள் ஏற்றப்பட்டன. சிறு ஓட்டு வீட்டில் குடி புகுந்தோம். நான்கைந்து வீடுகள் கொண்ட ஒரு காம்பவுண்டு, எல்லோருக்கும் பொதுவான பாத்ரூம். தனியாக இருந்து பழக்கப்பட்ட நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அப்பா இப்பொழுது அதிகமாக குடிக்க ஆரம்பித்து விட்டார். நாங்கள் குடிவந்த மறுநாளே அம்மா தெரிந்தவர்களை பிடித்து ஒரு தனியார் பள்ளியில் ‘ஆயாவாக’ சேர்ந்து விட்டாள். அப்பா வீட்டில் இருந்தார். காலையில் அப்பாவுக்கு சமையல் செய்து வைத்து விட்டு,
மேலும் அந்த காம்பெளண்டில் உள்ள இரு குழந்தைகளுக்கு பாடம் எடுத்து விட்டு, இதற்கு இடையில் எங்களையும் கவனித்து பின் எங்களுடனே கிளம்பி, எங்களை பள்ளியில் விட்டு விட்டு அரை கிலோ மீட்டர் நடந்தே அந்த பள்ளிக்கு செல்வாள்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. நாங்கள் ஒவ்வொருவராக எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேறினோம். மேற்கொண்டு படிக்க வைக்க முடியாது என்பது எனக்கு நன்கு தெரிந்தது. ஆனால் அம்மா அதை வாய் விட்டு சொல்லவில்லை.
ஒரு நாள் விடியற்காலையில் அப்பா இறந்து விட்டார். இரவு போதையுடன் தூங்கப்போனவர் காலையில் அசைவில்லாமல் இருந்ததை பார்த்து அம்மா அவரை தட்டி எழுப்ப பார்த்தாள் ஆனால் அவர் இறந்து வெகு நேரம் ஆகி விட்டது என்பது அவர் உடல் சில்லிட்டிருந்ததின் மூலம் தெரிந்தது. செய்தி கேட்டு வந்த அக்கம் பக்கத்தவர் உதவியுடன் அப்பாவின் இறுதிப்பயணம் முடிந்தது. அம்மாவின் தாலி விற்கப்பட்டது.
அனைத்தும் ஓய்ந்த பின அம்மாவிடம் நான் வேலைக்கு போகிறேன் என்றேன். அம்மா ஒன்றும் பேசவில்லை, பார்க்கலாம் என்றார்கள். மாலை வீடு வந்த பின் நாளைக்கு ஒரு கடையில் கூப்பிடுகிறார்கள் போகிறாயா? தெரிந்த கடைதான் என்றார்கள்..
மகிழ்ச்சியாக தலையசைத்தேன். வேலையும் கிடைத்த்து. கடையில் ‘சேல்ஸ் கேர்ல்’ வேலை, மிகவும் பிடித்தது, காரணம் நிறைய தோழிகள் கிடைத்தார்கள். இதன் மூலம் தங்கைக்கும் ஒரு வேலை ஏற்பாடு செய்ய முடிந்தது. இப்பொழுது அம்மாவின் முகத்தில் சிறிது மகிழ்ச்சியை காண முடிந்த்து. காரணம் தன் சுமையை சுமக்க “தோள்கள்” கிடைத்த சந்தோசம்தான் என்பது புரிந்த்து. ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை.அம்மா வேலை செய்யும் பள்ளியில் இருந்து ஒரு நாள் அம்மாவை ஆடோவில் கூட்டி வந்தார்கள். திடீரென பள்ளியில் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக கூறினார்கள். நாங்கள் பயந்து விட்டோம். ஹாஸ்பிடல் போகலாம் என்று கூப்பிட்டதற்கு அங்கேயே டாக்டர் ஊசி போட்டு மருந்து கொடுத்த்தாகவும் களைப்புத்தான் வேறு ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.
மறு நாள் காலையில் அம்மா என்ன சொல்லியும் கேட்காமல் ஆஸ்பத்திரிக்கு கூட்டி சென்றேன். டாக்டர் மிகவும் பொறுமையாக பரிசோதித்தார். சில டெஸ்டுகள் எடுக்க சொன்னார். அனைத்து பரிசோதனைகளும் செய்தோம். அம்மா இதுவெல்லாம் எதற்கு என்று புலம்பிக்கொண்டே இருந்தார்கள். டாக்டர் பரிசோதனை முடிவை தெரிவிக்க இரண்டு நாட்கள் கழித்து வரச்சொன்னார். அதுவரை மருந்துகளை எழுதி கொடுத்து சாப்பிடும்படி சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து நான் மட்டும் சென்று டாக்டரை பார்த்தேன். டாக்டர் என்னிடம் அம்மாவுக்கு குடலில் கான்சர் போன்ற அறிகுறிகள் தென்படுவடுவதாகவும், பயப்படவேண்டாம் என்றும் ஒரு ஆபரேசன் செய்தால் சரி செய்து விடலாம் என்றார்.
நான் அதிர்ந்து நின்று விட்டேன். பின் சுதாரித்து கொண்டு இதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன். ரூபாய் 40,000 வரை ஆகும் என்ரார். சீக்கிரம் ஏற்பாடுகளை செய்ய சொல்லி விட்டு மருந்து மாத்திரைகளை எழுதி தினமும் சாப்பிடும்படி கூறினார். வேலைக்கு போக பிடிக்காமல் வீட்டிற்கு வந்தேன். என் முகம் பார்த்த அம்மா உள்ளே சென்று காப்பி கலந்து தந்தாள். காப்பி குடித்த பின் தன்னிலை பெற்றேன்.
இதுவரை அம்மாவிடம் பொய் சொன்னதில்லை. விசயத்தை கூறினேன் அம்மா சிறிது நேரம் மெளனமாக இருந்தார்கள். பின் மெல்ல என் தலையை வருடி “கவலைப்படாதே” நான் அவ்வளவு சீக்கிரம் சாகமாட்டேன், உங்களை கரையேற்றாமல் நிச்சயம் நான் போக மாட்டேன். வயிற்றில் பால் வார்த்தது போல் இருந்தது எனக்கு, இது போதும். உனக்கு இருக்கும் நம்பிக்கை கூட எனக்கில்லாமல் போயிற்றே, “ஓ” நீ வாழ்க்கையில் போராடி வாழ்ந்தவள் இல்லையா? இதோ நானும் பேராட தயாராகிவிட்டேன். உன்னை மீட்பது மட்டுமல்ல நாம் இழந்து விட்ட சொத்துக்களில் கொஞ்சமாவது மீட்டு உன் கையில் ஒப்படைப்பேன். மனதுக்குள் நினைத்துக்கொண்டு அம்மாவை கட்டிப்பிடித்து இன்னும் மூன்று மாதங்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டு பொறுத்துக்கொள். கண்டிப்பாய் ஆபரேசன் செய்து விடலாம், அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டு நான் வேலைக்கு போகிறேன் என்றேன். மணி பதினொன்று ஆகிறதே அம்மா சொன்னதற்கு பரவாயில்லை பர்மிசன் போட்டு கொள்கிறேன். இனிமேல் வேலை.. வேலை.. வேலை, என் லட்சியமே நீதான் மனதுக்குள் எண்ணிக்கொண்டு வெளியே வந்தேன். இப்போதும் அதே வெயில், நா வறட்சி, எதுவும் என்னை பாதிக்கவில்லை.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Feb-18, 4:09 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 724

மேலே