தோல்வியடைந்த தோட்டாக்கள்

யாரைப் பாதுகாக்க
ஆயுதம் தரப்பட்டதோ
அவர்களையே துளைத்திருக்கின்றன
அத்தனை தோட்டாக்களும்!

யாரின் காவலுக்காக
காவல் துறை கட்டமைக்கப்பட்டதோ
அவர்களையே சுட்டழித்திருக்கின்றன
துப்புக்கெட்டவர்களின் துப்பாக்கி முனைகள்!

ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும்
எங்களுக்கான சவக்குழிகள்
உங்கள் துப்பாக்கிகளால் தூர்வாரப்படுகின்றன!

எங்கள் குருதி ருசிக்கக் காத்திருக்கும்
உங்களின் குத்தீட்டிகள்
எங்கள் குரல்வளை எலும்பிலேயே
கூர்தீட்டப்படுகின்றன!

எங்கள் போர்க்குணத்தை
போராட்டத்தின்மூலம் வெளிப்படுத்தினோம்!
நீங்களோ, தோல்வி பயத்தை உங்கள்
தோட்டாக்களின்மூலம் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!

தடியடி நடத்தினீர்கள்
தடுத்து முன்னேறினோம்!

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை
காலடியில் வீசினீர்கள்!
கண்ணீர் புதிதில்லையென்பதால்
கடந்தோம் அதனையும்!

தப்பென்ன செய்தோம் நீங்கள்
துப்பாக்கி தூக்கும்படி?
ஆணையிட்ட அரக்கனெவன் எங்களை
உயிர்போகத் தாக்கும்படி?

வாகனங்களை நீங்களே கொளுத்தி
வன்முறை செய்தோம் என்றீர்கள்!
வாழ்வதற்கு வழி கேட்டவர்களின்
வாயில் சுட்டுக் கொன்றீர்கள்!

குண்டு துளைத்தது
சிலரது உடல்களில் - ஆனால்
குருதி வழிந்தது
கோடி உள்ளங்களில்!

ஏற்கனவே புற்றுநோயால்
ஏகப்பட்ட இறப்புகள்!
எஞ்சியவரையும் கொல்லும் நீங்கள்
எச்சிலில் பிறந்த பிறப்புகள்!

அகர்வால் வீசும் எலும்பிற்காக
அகல வாய் திறக்கும் அரசே!
அகங்காரத்தின் எல்லை கடந்தால்
அடுத்தது நிச்சயம் அழிவே!

- நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (25-May-18, 10:48 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 35

மேலே